tamilnadu

img

ஊழல் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

மதுரை:
நேர்மையான காவல்துறை அதிகாரிகளை ஊக்கப்படுத்துவதில் காட்டும் ஆர்வம், ஊழல் காவல்துறைஅதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதிலும் இருக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கூறியுள்ளது.சிவகங்கை தாலுகா காவல் ஆய்வாளர் பொன்ரகு, சார்பு ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க சிவகங்கை காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடக்கோரி  சந்திரன் என்பவர்  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கை வெள்ளியன்று விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் ,”தமிழகத்தில் வழக்குப் பதிவு செய்யும் காவல்துறைஅதிகாரிகளை உயர் அதிகாரிகளிடம் புகார் செய்வது, உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதாக மிரட்டும் போக்கு அதிகமாக உள்ளது. வழக்கில் தொடர்புள்ளவர்களும், அவர்களின் உறவினர்களும் இந்தச்செயல்களில் ஈடுபடுகின்றனர்.குற்ற வழக்கில் தொடர்புடையவர்களின் நடவடிக்கைகளை நீதிமன்றம் ஊக்குவிக்காது. வழக்கில் உண்மையும், சூழ்நிலையும் முக்கியம்.வழக்குப் பதிவு செய்வதில் விதி மீறல் இருந்தால் மட்டுமே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியும். சட்டப்படி கடமைகளை நிறைவேற்றும் காவல்துறையினரை மிரட்டும் நபர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.  கெட்ட நோக்கத்துடன் வழக்குத் தொடருபவர்களை நீதிமன்றம் பொறுத்துக்கொள்ளாது. பணி விதிகள் படி பணி செய்ய மறுக்கும் அரசு ஊழியர்கள் மீது ரிட்மனு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் நடத்தை விதியை மீறியுள்ளாரா என்பதைப் பார்க்க வேண்டும். குற்ற வழக்குகளில் தொடர்புள்ளவர்கள் உள்நோக்கத்துடன், வெற்றுக் காரணங்களுடன் காவல்துறையினரை மிரட்டும் வகையில் தாக்கல் செய்யும் மனுக்களை அதிகபட்ச அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

நேர்மையான காவல்துறை அதிகாரிகளை காப்பாற்றத் தவறினால் அவர்களின் பணித்திறன் பாதிக்கப்படும். நேர்மையான அதிகாரிகளுக்கு விருது கொடுத்துப்பாராட்டினால் அவர்கள்மக்கள் எதிர்பார்க்கும் அளவில் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவார்கள். நேர்மையான காவல்துறை அதிகாரிகளை ஊக்கப்படுத்துவதில் காட்டும் ஆர்வம், ஊழல் காவல்துறைஅதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதிலும் இருக்கவேண்டும்.இந்த வழக்கில் மனுதாரருக்கும், அவரது சகோதரர்களுக்கும் இடையிலான சொத்துப் பிரச்சனை, அடிதடியில் முடிந்துள்ளது. இதனால்குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த வழக்கை மனுதாரர் சட்டப்படி சந்திக்க வேண்டும். இதனால்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டுள்ளார்.

;