headlines

img

இனி தப்ப முடியாது மோடி அரசே...

ஆறு மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டுதான் தலைநகர் தில்லியை முற்றுகையிட்டு, தடைகளைத் தகர்த்து நுழைந்து கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். அவ்வளவு எளிதில் அவர்களை தடுத்து நிறுத்திவிடவோ, கைது செய்து எங்கேனும் அடைத்துவிடவோ, புதிய வகை அடக்குமுறைகளை ஏவி ஒடுக்கிவிடவோ மோடி அரசால் இனி முடியாது.

இந்திய தொழிலாளி வர்க்கத்தின் - விவசாயவர்க்கத்தின் எந்தவொரு போராட்டத்தையும் பெரு முதலாளிகளுக்கு ஆதரவான கார்ப்பரேட் ஊடகங்கள் அவ்வளவு எளிதில் பிரதானப்படுத்தி காட்டிவிடுவதோ, அல்லதுஎழுதிவிடுவதோ இல்லை. அந்த ஊடகங்களின்துரதிருஷ்டம், இனியும் இந்திய விவசாயிகளின் பேரெழுச்சியை நாட்டு மக்களின் கண்களிலிருந்து மறைத்துவிட முடியாது. 

தில்லி காவல்துறையால் தில்லியில் திட்டமிட்டு சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடத்தியதைப் போன்று, தலைநகரை முற்றுகையிட்டி ருக்கும் விவசாயிகள் மத்தியில் புகுந்து கலவரத்தை நடத்திடவோ, பாஜக - ஆர்எஸ்எஸ் கும்பல்களிடம் துப்பாக்கிகளைக் கொடுத்து சுட்டுத் தள்ளிவிடவோ முடியாது. ஒருவரல்ல, இருவரல்ல; ஆயிரமல்ல, லட்சமல்ல... சுமார் ஒன்றேகால் கோடிப்பேர் இன்னும்தில்லிக்கு தொடர்ந்து நடந்து வந்த வண்ணம் இருக்கிறார்கள். சுமார் 1லட்சம் டிராக்டர்கள் தில்லியை முற்றுகையிட்டிருக்கின்றன. மோடி அரசின் தில்லி போலீசும், தலைநகரத்து எல்லைகளில் தடுத்து நிறுத்த முயன்ற யோகி  அரசின்உத்தரப்பிரதேசத்து போலீசும் இந்த விவசாய பெருங்குடிகளது கூட்டத்தின் முன்னால் தூசுக்குச் சமம்.
மோடியாலும் அமித்ஷாவாலும் இனி ஒன்றும்செய்ய முடியாது. எப்படி மராட்டிய விவசாயிகள்அன்றைய மராட்டிய பாஜக அரசை நடுநடுங்கச் செய்தார்களோ; எப்படி ராஜஸ்தானத்து விவசாயிகள் அன்றைய மாநில பாஜக அரசை தொடை நடுங்கச் செய்தார்களோ; அதைவிடப் பன்மடங்கு- அதைவிட பலநூறு மடங்கு விவசாயிகள் மோடியையும் அமித்ஷாவையும் அவர்களது எதேச்சதிகார அரசாங்கத்தையும் குலைநடுங்கச் செய்திருக்கிறார்கள்.

செங்கொடிகளை கைகளில் ஏந்தி, மஞ்சள் கொடிகளை கைகளில் ஏந்தி, பச்சைக்கொடிகளை கைகளில் ஏந்தி... அகில இந்தியவிவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவில் இணைந்திருக்கிற நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் இயக்கங்களது கொடிகளை எல்லாம் உணர்வாக நெஞ்சில் ஏந்தி - அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, வேளாண் விளைபொருள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல்) அவசரச் சட்டம் 2020, விவசாயிகள் விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் பண்ணை சேவை அவசரச் சட்டம் 2020, மின்சாரத் திருத்தச் சட்டம் மசோதா 2020 மற்றும் தொழிலாளர் விரோதச் சட்டங்களை ரத்து செய் என்ற பெரும் முழக்கத்தோடு வந்து குவிந்துகொண்டே இருக்கிறார்கள் விவசாயிகள். கொடிய சட்டங்களை ரத்து செய்யாமல் இனி தப்ப முடியாது, மோடி அரசே!
 

;