tamilnadu

img

ஊரடங்கு காலத்திலும் அடங்காத சாதிவெறி... தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கள ஆய்வு அறிக்கை வெளியீடு

சென்னை:
நிறவெறியை விட சாதிவெறி மிகவும்கொடியது என்று உயர்நீதிமன்ற முன்னாள்நீதிபதி ஹரிபரந்தாமன் சாடினார். 

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட கடந்த மூன்று மாத காலத்தில் தமிழகத்தில் தலித் மற்றும் பழங்குடி மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளைத் தொகுத்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிக்கையை திங்களன்று முகநூல் நேரலை வாயிலாக சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன் வெளியிட்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

இந்த கொடூரமான  ஊரடங்கு காலத்திலும் தோழர் சாமுவேல் ராஜூம் தமிழ்நாடுதீண்டாமை ஒழிப்பு முன்னணியும் மிகப்பெரிய முயற்சிகள் எடுத்து அதிகப்படியான தகவல்களை திரட்டி இருக்கிறார்கள். சாதாரண காலத்திலேயே திரட்டுவதற்கு கடினமான  தகவல்களை திரட்டி இருக்கிற தீண்டாமை ஒழிப்பு முன்னணியை பாராட்டுகிறேன். இவ்வறிக்கை மனச்சாட்சியை உலுக்குகிற விதமாக அமைந்திருக்கிறது.ஊரடங்கு காலத்தில் மட்டும் தலித் மக்களுக்கு எதிராக நடைபெற்ற வன்கொடுமைகள் - கொலைகள் 14, மலக்குழி மரணம் 4, பாலியல் வல்லுறவு 5, சாதி ஆணவப்படுகொலைகள் 2, சாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள் மீதான தாக்குதல் 5, தலித் ஊராட்சித் தலைவர்களுக்கு அவமரியாதை 3, அம்பேத்க ருக்கு அவமதிப்பு 2, கல்வி நிலையங்களில்சாதியப் பாகுபாடு 1, மயானம், மயானப்பாதை பிரச்சனை 2, அரசுப் பணியாளர் களின் பாரபட்சம் 3, கொத்தடிமை 1, தாக்குதல்கள் 41 என பல்வேறுவிதமான தகவல்கள் உள்ளன.

சாதி ஆணவக் கொலைகள்
குறிப்பாக கொலைகள் என்று வருகிறபோது சாதி மறுப்பு திருமணங்களின் போது நடைபெறுகிற கொலைகளை மட்டும்சாதி ஆணவப்படுகொலை என்று நாம்சொல்கிறோம். என்னைப் பொறுத்தவரை சாதி வெறி காரணமாக நடத்தப்படுகிற எல்லா கொலைகளையும் சாதி ஆணவப்படுகொலை என்றுதான் அழைக்க வேண்டும். காரணம், ஒரு பட்டியல் இனத்தவரை கொலை செய்வதற்கு சாதி ஆணவம்தான் காரணம். பாலியல் வல்லுற வுக்கும் சாதி ஆணவம் தான் காரணமா யிருக்கிறது. உதாரணமாக, சேலம் மாவட்டம் ஓமலூர்  அருகில் ஐடி ஊழியர் விஷ்ணு பிரியன் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக ஊருக்கு வந்தவரை கொலை செய்தவருக்கு சாதியைத் தவிர வேறு 
எந்த காரணமும் இல்லை. எனவேதான் இதை ஆணவக்கொலை என்று சொல்லவேண்டும். ஆணவச் செயல்கள்,ஆணவ தாக்குதல்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.

நிறவெறியைவிட சாதிவெறி  கொடூரமானது
இவற்றையெல்லாம் எதிர்த்து உரத்துக்குரல் கொடுப்பது மட்டுமல்ல, சட்டத்தின் வழியாக தண்டனைகளை நாம்அனைவருமாக சேர்ந்து பெற்றுக் கொடுக்க வேண்டும். சாத்தான்குளம் போல் குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு தண்டனை பெற்றுத் தருவதை நாம் உறுதி செய்திட வேண்டும். காரணம் இந்த அறிக்கை அவ்வளவு அதிர்ச்சியளிக்கக் கூடிய விதத்தில் இருக்கிறது. நிறவெறித் தாக்குதல் நடைபெறுகிற போது அதை எதிர்த்து கண்டனம் தெரிவிக்கிறோம்.கடந்த மே 
மாதத்தில் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிலாய்ட் என்கிற ஒரு கருப்பு இனத்தவர் 8 நிமிடம் 46 நொடிகள் பூட்ஸ் காலால் மிதித்து கொலை செய்யப்பட்ட போதுஉலகமே கண்டித்தது. ஆனால் நிறவெறியைவிட சாதி வெறி  கொடூரமானது.நிறவெறியின் வரலாறு 500 ஆண்டுகள். சுமார் 1500 களில் தான் ஆப்பிரிக்க கருப்பினத் தவர்கள் அமெரிக்காவில் அடிமையாக விற்கப்பட்டார்கள் என்று பார்க்கிறோம். 1800 களில் ஆபிரகாம் லிங்கன் தலைமையில் நடைபெற்ற கிளர்ச்சியில் கருப்பின மக்களுக்கு விடுதலை கிடைத்தது. என்றாலும் அவர்கள் மீது அவ்வப்போதுகொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் சாதி ஆணவத்தைப் பொறுத்த வரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக  கட்டமைக்கப்பட்டிருக்கிறது. 

அமெரிக்க முதலாளித்துவம் நிறவெறிக்கு எதிராக குரல் கொடுக்கிறது.ஆனால் இந்திய முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்தோடு  கைகோர்த்துக்கொண்டு சாதியைப் பாதுகாக்கிறது.எனவேதான் இங்கே கொடுமைகள் தொடர்கிறது. கொடுமைகளை எதிர்த்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

மலக்குழி அவமானம் வேறெங்கும் இல்லை
இங்கே மலக்குழி மரணங்கள் இன்றுவரை தொடர்கிறது. நம்மை வலிமை பெற்றநாடு என்றும் வல்லரசு நாடு என்றும்  சொல்லிக்கொள்கிறோம். மலக்குழியில் மனிதன் இறங்கி வேலை செய்வது  அவமானகரமான செயல் அல்லவா? இந்தியாவைத் தவிர உலகில் வேறு எங்கும் இந்த கொடுமை இல்லை. இங்கு மட்டுமே அது நடைபெறுவதற்கு காரணம் இங்கே சாதி ரீதியாக பட்டியலின மக்கள் இருக்கிறார்கள் .ஒருவேளை அந்தத் தொழில் இயந்திர மயமாக்கப்பட்டால் அதிக வருமானம் கிடைத்தால் எல்லோரும் அந்த தொழிலுக்கு வருவதற்கான சூழல் உருவாகும்.இப்போது மலக்குழி மரணம் தூத்துக்குடி யில் நடைபெற்றிருக்கிறது. இந்த கொலைகளை நாம் பார்த்தாலும்கூட தூத்துக்குடி, நெல்லை பகுதிகளிலும் சேலம், நாமக்கல் பகுதிகளிலும் கடலூர்,விழுப்புரம் பகுதிகளிலும் தான் பெரும்பாலான கொலைகள் நடந்து இருப்பதை பார்க்க முடிகிறது. இவையெல்லாம் தடுக்கப்படவேண்டும். இவைகளை தடுப்பதற்காக குரலெழுப்பி வருகிற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் குரலோடு பெரியாரிய அமைப்புகளும் அம்பேத்கரிய அமைப்புகளும் பொது உடமை இயக்கங்களும் ஒன்றிணைய வேண்டும். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் இந்த மகத்தான முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் என்று வாழ்த்தி இந்நிகழ்வை நான் தூக்கி வைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் இணைய வழியாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் நன்றி தெரிவித்தார். மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

;