tamilnadu

img

கிராம வங்கிகளில் விவசாய நகைக்கடனுக்கான அநியாய வட்டியை ரத்து செய்திடுக!

சென்னை:
கிராம வங்கிகளில் விவசாயத்திற்காக பெறும் நகைக்கடனுக்கு பொதுத்துறை வங்கிகளை விட அநியாய வட்டி வசூலிக்கப்படுகிறது. இதனை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு  விவசாயிகள்சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கிராமப்புற மக்களுக்கு எளிதில் வங்கிச் சேவைகிடைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் துவங்கப் பட்டது கிராம வங்கிகள். பாண்டியன், பல்லவன் என்று பல்வேறு பெயர்களில் துவங்கப்பட்ட கிராமவங்கிகள் தற்போது மாநில அளவில் தமிழ்நாடு கிராம வங்கிகள் என்று மாற்றப்பட்டு 632 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.பொதுத்துறை நிறுவனமான இந்த கிராம வங்கிகளில் விவசாயத்திற்காக பெறும் நகைக்கடனுக்கு 8.25 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. அனைத்து பொதுத்துறை வங்கிகளும் 7 சதவீதம் வட்டி நிர்ணயித்துள்ள நிலையில் கிராம வங்கி மட்டும் 8.25 சதவீதம் என்று நிர்ணயித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. தனியார் வங்கி மற்றும்அடகு கடைகளில் வட்டி அதிகம் என்ற காரணத்தினால்தான் பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் நகையை அடகு வைக்கிறார்கள். ஏற்கனவே கடன் சுமை காரணமாக நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் வங்கி நிர்வாகம் உடனடியாக இந்த அநியாய வட்டியை ரத்துசெய்து, மற்ற பொதுத்துறை வங்கிகள் போல் நகைக்கடனுக்கு 7 சதவீதம் என்று வட்டியை நிர்ண யிக்க வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்கோருகிறது.

செயல்முறைக்கட்டணத்தை ரத்து செய்க!
அத்துடன், விவசாயக் கடனுக்கு செயல்முறைக் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை வேறு எந்த வங்கிகளிலும் இல்லை. வங்கி தன்னுடைய பணியை செய்வதற்கு விவசாயிகளிடம் 1 லட்சம் ரூபாய்க்கு 250 ரூபாய் கட்டணம் வசூலிப்பது விவசாயிகளைஏமாற்றும் செயலாகும். எனவே, இந்த செயல்முறைக்கட்டணம் வசூலிப்பதையும் உடனடியாக நிறுத்திட வங்கி நிர்வாகம் முன்வர வேண்டும். இந்தப் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு, விவசாயிகளுக்கு விரோதமான வட்டி மற்றும் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;