tamilnadu

img

அத்து மீறும் பல்கலைக்கழக மானியக் குழு: தமிழக அரசு தலையிட கோரிக்கை

பல்கலைக்கழகத் துணை வேந்தர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு கடிதம் அனுப்பியுள்ளது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது. இதற்கு தமிழ் நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தேசியக் கல்விக் கொள்கை 2020 நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பல்கலைக்கழகங்கள் நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ள அறிவுறுத்தி, பல்கலைக்கழகத் துணை வேந்தர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு 20.10.2020 தேதியிட்ட கடிதம் அனுப்பி உள்ளது. இக்கடிதம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது. பல்கலைக்கழக நிர்வாகம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி மாநில பட்டியலில் இடம் பெற்றுள்ளது.  தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து தமிழ் நாடு அரசு எந்த முடிவையும் அறிவிக்காத நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு இத்தகைய கடிதம் எழுதுவது  நியாயமற்ற அணுகுமுறை. பல்கலைக் கழக நிர்வாகம் தொடர்பாக தனக்கு இல்லாத அதிகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழு தனக்குத் தானே எடுத்துக் கொள்ள முற்படுகிறது. உயர் கல்வி நிறுவனங்களில் தரத்தை தீர்மானித்து ஒருங்கிணைப்பு என்பதற்கும், பல்கலைக் கழக நிர்வாக சீர்திருத்தங்கள் என்பதற்கும் வேறுபாடு உள்ளது. . இக்கடிதம் குறித்து தமிழ் நாடு அரசு உரிய கவனம் செலுத்தி, மாநில அரசின் உரிமையையும், மக்களின் நலனையும் காத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

;