கன்னியாகுமரி மாவட்டம் கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (24). இவர், திருச்சியில் உள்ள திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகின்றனர். இந்நிலையில், இவரது உறவினர் திருமணம் நேற்று கன்னியாகுமரியில் நடைபெற்றுள்ளது. இதற்காக முத்துக்குமாருடன் பயின்று வரும் 12 மாணவ மாணவிகள் கன்னியாகுமரிக்குச் சென்றுள்ளனர். நேற்று திருமணம் முடித்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தளங்களுக்கு அவர்கள் சென்று வந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை லெமூர் கடற்கரைக்குச் சென்ற அவர்கள், கடலில் இறங்கிக் குளித்துள்ளனர். அப்போது, வந்த ராட்சத அலை 6 மாணவர்களை இழுத்துச் சென்றுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள், விரைந்து சென்று இழுத்து செல்லப்பட்ட இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் 4 மாணவர்கள் மாயமான நிலையில், சிறிது நேரத்திற்குப் பிறகு அவர்களின் சடலங்கள் கரை ஒதுங்கின. அதேநேரம், மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த நெய்வேலியை சேர்ந்த காயத்ரி(25), திண்டுக்கலைச் சேர்ந்த ப்ரவீன்(23), ஆந்திராவைச் சேர்ந்த வெங்கடேஷ்(24), தஞ்சையைச் சேர்ந்த சாருகவி(24), குமரியை சேர்ந்த சர்வதர்ஷித்(23) ஆகிய 5 பேரின் குடும்பத்தாருக்கு போலீசார் தகவல் அளித்தனர். குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாகக் காணப்படும் என்பதால் கடற்கரைக்குப் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ஶ்ரீதர் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.