மதவெறியை விதைத்து கலவரத்தை தூண்டிவிட்டு பாரதிய ஜனதா குளிர்காய நினைப்பதாகவும், அக்கட்சியின் அரசியலை அம்பலப்படுத்துங்கள் எனவும் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்களைத் தேர்வு செய்வது தோழமைக் கட்சிகளுக்கு இடங்களைப் பகிர்ந்தளிப்பது, அனைவருடனும் ஒருங்கிணைந்து செயல்படுவது என நிர்வாகிகள் கடமை உணர்வுடனும், பொறுப்புடனும் செயலாற்றிட வேண்டும்.
கூட்டணிக் கட்சியின் உள்ளூர் நிர்வாகிகளுக்கு நெருடல் ஏற்படாத வகையில் தொண்டர்களின் அணுகுமுறை அவசியம் அமைய வேண்டும். குற்றப் பின்னணி உள்ளவர்களை வேட்பாளர்களாகத் தேர்வு செய்யக் கூடாது.
அதிமுக தலைமையினால் கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் பட்ட பாட்டை நினைவுபடுத்துங்கள். தமிழ்நாட்டில் மக்கள் மனதில் மதவெறியை விதைத்து, கலவரத்தைத் தூண்டிவிட்டு, அரசியல் குளிர்காய அவசரம் காட்டும் பாஜகவின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்துங்கள்.
நல்லாட்சியின் விளைச்சலை உள்ளாட்சியில் முழு வெற்றியாக அறுவடை செய்திட, ஊக்கத்துடன் அயராது பாடுபடுங்கள் என தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.