tamilnadu

காவல் இணை ஆணையரின் தந்தை சாலை விபத்தில் பலி

திருநெல்வேலி, மே 7-குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள சீதப்பால் கிராமத்தை சேர்ந்தவர் ரத்னசபாபதி (67). இவரது மூத்த மகன் சுதாகர், சென்னை மாநகர போக்குவரத்து காவல் இணை ஆணையராக பணியாற்றி வருகிறார். மற்றொரு மகன் அருண் பிரசாத்(35). இவர் சென்னையில் ‘கிரானைட்’ வியாபாரம் செய்து வருகிறார். ரத்னசபாபதி மகன்களுடன் சென்னையில் வசித்து வந்தார். ஊரில் நடைபெறும் கோவில் திருவிழாவுக்காக திங்களன்று இரவு ரத்னசபாபதி, அவரது மகன் அருண் பிரசாத், அவரது மனைவி பிரசன்னா(29), குழந்தை லியா(2) ஆகியோர் காரில் சீதப்பால் கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தனர். காரை அருண் பிரசாத் ஓட்டினார். செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில், மூன்றடைப்பு தனியார் பொறியியல் கல்லூரி அருகே கார்வந்தபோது, முன்னே சென்ற லாரி திடீர் என்று பிரேக் பிடித்துவேகம் குறைந்தது. இதனால் லாரி மீது மோதாமல் இருக்க காரை பக்கவாட்டில் திருப்பியபோது சாலை தடுப்பு சுவற்றில் மோதி கவிழ்ந்தது. இதில் காரின் முன்புறம் இருந்தரத்னசபாபதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அருண் பிரசாத், அவரது மனைவி பிரசன்னா ஆகியோர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். குழந்தை லியா காயம் ஏதுவும் இல்லாமல் தப்பியது.அந்த வழியாக வந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மூன்றடைப்பு இன்ஸ்பெக்டர் (பொ) சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று ரத்னசபாபதி உடலை மீட்டு உடற்கூராய்விற்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். காயம் அடைந்த அருண் பிரசாத், அவரது மனைவி பிரசன்னா ஆகியோர் பாளையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

;