tamilnadu

img

இந்தியாவைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்!

புதுதில்லி:
பொருளாதார சரிவைக் கண்டுள்ள இந்தியாவைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என, மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில், காங்கிரஸ் மூத்தத் தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரத்தை, 2 வாரங்களுக்கு முன்பு சிபிஐ கைது செய்தது. அவரை செப்டம்பர் 19-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், ப. சிதம்பரம் தற்போது தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

எனினும், ப. சிதம்பரம் தனது குடும்பத்தினர் மூலமாக அவ்வப்போது, ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் தனது கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், திங்கட்கிழமையன்றும் ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.“எனது குடும்பத்தினர் எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். நண்பர்கள், கட்சி சகாக் களின் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். எனக்கு 74 வயது என்றனர்.ஆம் எனக்கு 74 வயதாகி விட்டது. ஆனால், மனதளவில் நான் இளைஞன். எனது குடும்பத்தினர் வாயிலாக நான் இந்த ட்வீட்டைப் பதிவு செய்கிறேன். இன்றைய தினம் எனது எண்ணங்கள் பொருளாதாரத்தைப் பற்றியே உள்ளன. ஆகஸ்ட் மாதத்துக்கான ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் 6.05 சதவிகிதமாக சரிவைக் கண்டிருக்கிறது. ஏற்றுமதி ஆண்டுக்கு 20 சதவிகிதம் என்ற உயர்வை அடையாமல் எந்த நாடும் உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவிகித வளர்ச்சியை எட்ட முடியாது. பொருளாதார சரிவை கண்டுள்ள இந்தியாவை கடவுள் காப்பாற்றட்டும்.” இவ்வாறு ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

;