tamilnadu

img

இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி ; பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகர் ஒப்புதல் வாக்குமூலம்

புதுதில்லி:

இந்தியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடியின் நிதி ஆலோசகர் ரதின் ராய் கூறியுள்ளார்.


பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினர்களில் ரதின் ராயும் ஒருவராவார். பிரபல நிதி ஆர்வலரான இவர், தேசிய பொதுநிதி மற்றும் கொள்கை கல்விக் கழகத்தின் இயக்குநராகவும் இருக்கிறார்.இந்நிலையில்தான், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், இந்திய பொருளாதாரம் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:


கடந்த 1991-ஆம் ஆண்டில் இருந்தே நமது பொருளாதாரம் ஏற்றுமதியின் அடிப்படையில் வளர்ச்சி பெறாமல் உள்ளது. மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் அடிப்படையில் மட்டுமே வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆனால், தற்போதைய நிலையில், இந்தியாவின் 10 கோடி மக்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யும் அளவிற்கு இந்தியா வளரவில்லை.


தென்கொரியா, சீனா போன்ற நாடுகளில் ஏற்றுமதி அடிப்படையில் பொருளாதார வளர்ச்சி உள்ளது. பிரேசில், தென்னாப்பிரிக்காவில் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவிற்கே பொருளாதார வளர்ச்சி உள்ளது. ஆனால், நம்முடைய நாட்டின் தற்போதைய பொருளாதார பின்னடைவால், மேலே கண்ட நாடுகளை விட வளர்ச்சியில் கீழே செல்ல வாய்ப்பு உள்ளது.உண்மையில் இந்த பாதிப்பு கடுமையானது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா, பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கி உள்ளது. நமது உள்நாட்டுத் தேவை குறைந்து, ஏற்றுமதி அதிகரித்தால் மட்டுமே இந்திய பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது.


இதுகுறித்து அரசுக்கு நான் கடிதங்கள் எழுதியுள்ளேன். அதன்படி அரசு ஏற்றுமதியை அதிகரிக்கும் பட்சத்தில், நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை தடுத்து வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். நான் அளித்துள்ள ஆலோசனைகளின்படி செயல்பட்டால், இன்னும் 5 அல்லது 6 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேம்படும்.

இவ்வாறு ரதின் ராய் கூறியுள்ளார்.


;