tamilnadu

img

‘ஒவ்வொரு மலையாளிக்குள்ளும் ஒரு கம்யூனிஸ்ட் இருக்கிறான்’.... மோடி ஜெயிக்க முடியவில்லை எனில், அதுதான் கேரளத்தின் அழகு..!

மும்பை:
நாடு முழுவதும் வெற்றியை ருசித்த பிரதமர் மோடி, கேரளத்தில் ஜெயிக்க முடியாமல்போகிறது என்றால், அதுதான் கேரளத்தின் அழகும், தனிச்சிறப்பும் என்று பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் கூறியுள்ளார்.கேரளத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு மலையாளிக்குள்ளும் ஒரு கம்யூனிஸ்ட் இருப்பதாகவும் ஆபிரகாம் குறிப்பிட்டுள்ளார்.மும்பையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், ஜான் ஆபிரகாம் கலந்து கொண்டநிலையில், அவரிடம் “உங்களின் சொந்த மாநிலமான கேரளத்தில், பிரதமர் மோடிக்கு ஏன் செல்வாக்கு இல்லை?” என்று கேள்விஎழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த போதுதான் ஜான் ஆபிரகாம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக மேலும் அவர் கூறியிருப்பதாவது:
“கேரளத்தில், மோடியால் ஏன் இன்னும் ஜெயிக்க முடியவில்லை? என கேட்கிறீர்கள். சொல்லப்போனால் அதுதான் கேரளத்தின் அழகு. ஒரு 10 அடி இடைவெளியில், ஒரு இந்து கோயில், மசூதி, சர்ச் ஆகிய மூன்றையும் அங்கு பார்க்க முடியும். எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக வழிபாடு நடக்கும். அது அங்கு ஒரு பிரச்சனையே இல்லை. உலகமே இன்று முன்நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு கேரளம்தான். எல்லா மதங்களும், இனங்களும் ஒரே இடத்தில் அமைதியாக வாழ முடியும் என்பதற்கான மிகச் சிறந்த உதாரணம் கேரளம். அதுமட்டுமல்ல, கேரளம், ஒரு கம்யூனிச மாநிலம். பிடல் காஸ்ட்ரோ மறைந்த போது கேரளத்தில் அவருடைய பதாகைகளை ஏந்தி பலர் இரங்கல் செலுத்தியது எனது நினைவில் இருக்கிறது. என்னுடைய சிறு வயதில் காரல் மார்க்ஸ் பற்றிய புத்தகத்தை கொடுத்து எனது தந்தை படிக்கச் சொன்னார். கேரளத்தில் ஒவ்வொரு மலையாளிக்குள்ளும் ஒரு கம்யூனிஸ்ட் இருக்கிறான். அந்த வகையில், சமத்துவமான வாழ்க்கை, சமமான பொருளாதார பங்கீடு ஆகியவை தான் எங்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையில் ஜொலிக்கும் கோவில்தான் கேரளா.இவ்வாறு ஜான் ஆபிரகாம் பேசியுள்ளார்.ஜான் ஆபிரகாம், ‘மெட்ராஸ் கபே’, ‘சத்யமேவ ஜெயதே’ உள்ளிட்ட தேசபக்தியை முன்னிறுத்தும் படங்களில் நடித்திருப்பவர் ஆவார். எனினும், இதற்கு முன்பு அரசியல் சார்ந்த கருத்துக்களை ஒருபோதும் அவர் தெரிவித்தது இல்லை. ஆனால், ஒரு கேள்வியின் மூலம் ஜானின் அரசியல் பார்வையை செய்தியாளர் ஒருவர் வெளிக்கொண்டு வந்துள்ளார்.

;