tamilnadu

img

மத்திய தொகுப்பு மின்விலை உயர்வு தமிழகத்தில் மின்சாரக் கட்டண உயர்வு இல்லை

சென்னை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தில் நிதி நெருக்கடி இருந்தாலும், தமிழகத்தில் தற்போதைக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படாது என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். சென்னையில் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 நிதி நெருக்கடி இருந்தாலும் அதனை மக்களை நோக்கி திருப்ப அரசுக்கு விருப்பமில்லை. இன்னும் சில மாதங்களுக்கு கட்டண உயர்வு இருக்காது. தற்போது தான் நாடு திரும்பியுள்ள முதலமைச்சரிடம் இதுகுறித்து பேசவுள்ளேன். மேலும் மின்சாரக் கட்டணத்தை மாற்றுவதற்கு தங்களிடம் தற்போது எந்த முன்மொழிவும் இல்லை.  புதிய மின் இணைப்புகளுக்கான கட்டணத்தை திருத்துவதற்கான நடவடிக்கைகளில் மட்டுமே தமிழ்நாடு மின்சாரஒழுங்குமுறை ஆணையம் ஈடுபட்டுள்ளது. ஆனால் அதிலும் ஒரு முடிவு எட்டப்பட வில்லை.இச்சூழலில் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்துக்கு நடப்பாண்டுக்கு தேவையான வருவாய் அளவைக் கூட முன்வைக்கவில்லை.  நடப்பாண்டில் டான்ஜெட்கோவின் நிதிச்சுமை 7 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. கஜா புயல் தாக்கத்தால் மின் கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதம் தான் இந்த நிலைக்கு காரணம்.  கஜா புயலால் சேதமடைந்த மின் கட்டமைப்புகளை சீரமைப்பதற்கு மட்டுமே 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவிடப் பட்டுள்ளது. ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமலாக்குவதில் ஆயிரத்து 200 கோடி ரூபாய்கூடுதலாக செலவானதாகவும், அது தவிர நிலக்கரி விலை, அதனை கொண்டு வரும் செலவு, மத்திய அரசின் தொகுப்பிலிருந்து பெறும் மின்சாரத்தின் விலை ஆகிய அனைத்தும் உயர்ந்துவிட்டது.  மத்திய அரசு தொகுப்பிலிருந்து பெறப்படும் ஒரு யூனிட்மின்சாரத்தின் விலை, 44 காசுகள் உயர்ந்துள்ளது. காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்து வதில், காற்றாலை நிறுவனங்களுடன் பிரச்சனைகள் உள்ளது. அவை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் விசாரணையில் உள்ளது.  இதுபோன்ற பிரச்சனைகளால் ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்திப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

;