districts

திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சிராப்பள்ளி, ஏப்.29 - திங்களன்று காலை திருச்சி விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியனின் மின்னஞ்சலுக்கு தகவல் ஒன்று வந்தது. அதில் திருச்சி விமான நிலையம் உள்பட சில விமான நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க உள்ளனர்  என்று அதிர்ச்சித் தகவல் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதையடுத்து உஷாரான விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியன், உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மத்திய தொழில் பாதுகாப்பு படை திருச்சி விமான நிலைய வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மூன்றடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, திருச்சி விமான நிலையத்திற்குள் பயணிகள் வந்து செல்லும் பகுதி முழுவதும் பலத்த சோதனை நடத்தப்பட்டது. 

இந்த திடீர் சோதனை விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதற்கிடையில் விமான நிலைய இயக்குநருக்கு வந்த மின்னஞ்சல் முகவரி யாருடையது, இந்த மர்ம நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

;