tamilnadu

img

மருத்துவ மாணவர்கள் 5 பேர் கடலில் முழ்கி உயிரிழப்பு - முதலலைச்சர் இரங்கல்

கன்னியாகுமரி மாவட்டம் கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (24). இவர், திருச்சியில் உள்ள திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இந்நிலையில், இவரது உறவினர் திருமணம் நேற்று கன்னியாகுமரியில் நடைபெற்றுள்ளது.

இதற்காக முத்துக்குமாருடன் பயின்று வரும் 12 மாணவரகள் கன்னியாகுமரிக்குச் சென்றுள்ளனர். நேற்று திருமணம் முடித்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தளங்களுக்கு அவர்கள் சென்று வந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை லெமூர் கடற்கரைக்குச் சென்ற அவர்கள், கடலில் இறங்கிக் குளித்துள்ளனர். அப்போது, வந்த ராட்சத அலை 6 மாணவர்களை இழுத்துச் சென்றுள்ளது. இதில் 5 மாணவர்கள் கடலில் முழ்கி உயிரிழந்தனர்.. இதையடுத்து அவர்களின் குடும்பத்தாருக்கு போலீசார் தகவல் அளித்தனர். சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரி லெமூர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த 5 மருத்துவ மாணவர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், இராஜாக்கமங்கலம் கிராமம், லெமூர் கடற்கரையில், இன்று காலை சுமார் 10 மணியளவில் திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கால் நனைப்பதற்காக கடலில் இறங்கியபோது, கடல் அலை அதிகமாக இருந்ததால் எதிர்பாராதவிதமாக கடல் அலை இழுத்துச் சென்றதில் நெய்வேலியைச் சேர்ந்த செல்வி.காயத்திரி (வயது) 25 த/பெ.பாபு, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வன். சர்வதர்ஷித் (வயது 23) த/பெ.பசுபதி, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வன். பிரவின்சாம் (வயது 23), த/பெ. முருகேசன், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி.சாருகவி (வயது 23) த/பெ.துரைசெல்வன் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த செல்வன். வெங்கடேஷ் (வயது 24) ஆகிய 5 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மருத்துவக் கல்வி பயின்று உயிர்காக்கும் மருத்துவராகி மருத்துவச் சேவையில் ஈடுபடவிருந்த இம்மாணவர்களின் உயிரிழப்பு உண்மையிலேயே மருத்துவ உலகிற்கும், தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பாகும். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன்.

இந்தத் துயரகரமான சம்பவத்தில் தம் பிள்ளைகளை இழந்து வாடும் பெற்றோர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;