tamilnadu

முன்ஜாமீன் கோரி கமல்ஹாசன் மனு தாக்கல்

சென்னை, மே 15-இந்து தீவிரவாதி என பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து அமைப்பினர் காவல் நிலையங்களில் புகார் கொடுத்து வருகின்றனர். அதேபோல், சென்னை மாநகர அலுவலகத்தில் வழக்கறிஞர் தமிழ்வேந்தன் மற்றும் அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி சார்பில் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது. இதில் கமல்ஹாசனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசுதல், மத ரீதியில் மோதலை தூண்டும் வகையில் பேசுதல் என இரண்டு பிரிவுகளில் கமல் மீது காவல் நிலையத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது.இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனவும், இதனை அவசர வழக்காகக் விசாரிக்க கோரியும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி முன்பாக கமல்ஹாசன் சார்பில் முறையிடப்பட்டது. அப்போது நீதிபதி, வழக்கு மற்றும் வழக்கு விசாரணைக்கு தடை கோரும் மனுக்களை விடுமுறை கால அமர்வில் விசாரிக்க இயலாது என்றும் வேண்டுமென்றால், மனுதாரர் முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்தால் அதனை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.இதையடுத்து, கமல்ஹாசன் தரப்பில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு வியாழனன்று(மே 16) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

;