tamilnadu

img

வி.தொ.ச.திருவாரூர் செயலாளர் தோழர் பி.ஆர்.சாமியப்பன் காலமானார்

திருவாரூர்,ஏப்.12- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருவா ரூர் மாவட்டக்குழு உறுப்பி னரும் அகில இந்திய விவசா யத்தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளருமான தோழர் பி.ஆர்.சாமியப்பன் சனிக்கிழமையன்று இரவு உடல்நலக்குறைவால் கால மானார். அவருக்கு வயது 75.

தோழர் பி.ஆர்.சாமியப்பன்  1965 ஆம் ஆண்டில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். விவசாயிகள் இயக்கத் தலைவராக, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளராக, கட்சியின் ஒன்றியச் செயலாளராக, மாவட்ட செயற்குழு உறுப்பினராக செயல்பட்டார். சமரசமற்ற போராளியாக கட்சியின் அனைத்துப் போராட்டங்களிலும் முன்னின்றவர். அவரது திடீர் மறைவு கட்சியினருக்கும் பொது மக்களுக்கும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பூபதி என்ற மனைவியும் மகள்கள் ஜெயா, சித்ரா,  மகன்கள் சுந்தரய்யா, சிற்றரசு ஆகியோர் உள்ளனர்.

அவரது மறைவுச் செய்தியறிந்து கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், ஒன்றியச் செயலாளர் என்.இடும்பையன், ஊரட்சிமன்ற தலைவர் கணேசமூர்த்தி (திமுக), உள்ளாட்சிமன்ற தலைவர்கள், பிரதிநிதிகள், முன்னணி தலைவர்கள், பல்வேறு கட்சி நிர்வாகிகள், கிராம மக்கள் உட்பட திரளானோர் அவரது உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி நிழச்சி ஞாயிற்றுக்கிழமையன்று மதியம் 3 மணியளவில் தப்பளாம்புலியூர் கிராமத்தில் நடைபெற்றது.

வி.தொ.ச. அஞ்சலி

தோழர் சாமியப்பன் மறைவுக்கு அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்கத்தின் மாநிலக்குழு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம் அவரது உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினார்.சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பத்தூர் கிராமத்திலும் திருவாரூர் ஒன்றியப்பகுதியிலும்  விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள், ஏழை எளிய மக்களுக்காக தன்னலமற்ற சேவை புரிந்தவர்.  அவரின் இறப்பு செங்கொடி இயக்கத்திற்கு பெரும் இழப்பாகும். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் தோழர்களுக்கும் விவசாயத்தொழிலாளர் சங்கத்தின் மாநிலக்குழு இரங்கலை தெரிவித்துள்ளது. சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர் தொலைபேசி மூலம் இரங்கலை தெரிவித்துள்ளார்.
 

 

;