tamilnadu

img

பிரபல இயக்குநர் நிஷிகாந்த் காமத் காலமானார்

ஹைதராபாத்
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் நிஷிகாந்த் காமத் (50). இவர் திரைத்துறையில் நடிப்பு, எழுத்து, இயக்கம் போன்ற பிரிவுகளில் ஆர்வம் கொண்டவர். இதுவரை 7-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். 8 படங்களில் நடித்து, 2 படங்களுக்கு கதை எழுதியுள்ளார். இவரது படங்கள் பெரும்பாலும் ஹிந்தி, மராத்தி ஆகிய மொழிகளில் மட்டுமே உள்ளன என்றாலும், தமிழில் மாதவனை வைத்து 'எவனோ ஒருவன்' என்ற படத்தை இயக்கியுள்ளார். 

படம் சாதனை படைக்கவில்லையென்றாலும், ஹிட் அடித்தது. கடைசியாக 2018-ஆம் ஆண்டு பவேஷ் ஜோஷி என்ற படத்தை இயக்கினார். அதன்பின் உடல்நலனில்லாமல் இருந்த நிஷிகாமத் 'தர்பதர்' என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் 2022-ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவித்திருந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக பட வேலைகள் கைவிடப்பட்ட நிலையில், அண்மையில் நிஷிகாந்த்திற்கு  கல்லீரல் இழைநார் வளர்ச்சி பிரச்சினை காரணமாக தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனளிக்கவில்லை. 

இந்நிலையில், இன்று (ஆக.,17) மாலை உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.  இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள்  ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள். இன்று காலையிலேயே சிகிச்சை பலனின்றி காலமாகிவிட்டதாக தகவல் பரவியது. ஆனால் மருத்துவமனை நிர்வாகம் மறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

;