districts

img

காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறு பேச்சு: சவுக்கு சங்கர் கைது - 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் பல்வேறு யூடியூப் சேனல்களில், அரசியல் தொடர்பான கருத்துகளை தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு சவுக்கு சங்கர் நேர்காணல் அளித்திருந்தார். அதில் காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை சவுக்கு சங்கர் தெரிவித்தாக கூறப்படுகிறது. இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

சவுக்கு சங்கர் மீது பிறருக்கு தொல்லை தரும் வகையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், ஒரு பெண்ணின் நாகரீகத்தை அவமதிக்கும் வகையில் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், சமூக வலைதளங்களில் ஆபாசமான விஷயங்களை வெளியிடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் சவுக்கு சங்கர் தங்கியிருப்பது மாநகர சைபர் கிரைம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேனி சென்ற சைபர் கிரைம் காவல் துறையினர், அங்கு தங்கி இருந்த சவுக்கு சங்கரை இன்று அதிகாலையில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை அங்கிருந்து கோவை சைபர் கிரைம் காவல் துறை அலுவலகத்திற்கு தேனியில் இருந்து காவல் துறையினர் அழைத்து வந்தனர். கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள சைபர் கிரைம் காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். விசாரணைக்கு பின்னர் சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கவும் காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே சவுக்கு சங்கரை அழைத்து சென்ற போலீஸ் வாகனம்  திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் சிறிய விபத்துக்கு உள்ளானது. போலீஸ் வாகனம் லாரி மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் சங்கர் மற்றும் காவல் துறையினர் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் கோவைக்கு செல்லும் வழியில் இருந்த ஒரு மருத்துவமனையில் முதலுதவி பெற்ற பின்னர், கோவைக்கு அதே வாகனத்தில் சவுக்கு சங்கரை காவல் துறையினர் அழைத்து சென்றனர்.

 

;