tamilnadu

img

ஒரு முதல்வர், தனது பாதுகாப்புக்கு எதிர்க்கட்சியைச் சார்ந்திருக்கும் அவலம்

புதுதில்லி:

ஒரு முதல்வர், தனது பாதுகாப்புக்கு எதிர்க்கட்சியை நம்பியிருக்கும் அவலம் தில்லியில் இருப்பதாக, அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், மே 4-ஆம் தேதி மாலை தில்லியில் உள்ள மோதி நகரில் மக்களிடம் திறந்த வாகனத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, சுரேஷ் என்ற நபர் திடீரென பிரச்சார வாகனத்தின் மீது ஏறி, அரவிந்த் கெஜ்ரிவாலின் கன்னத்தில் பலமாக அறைந்தார். 

இதனைச் சற்றும் எதிர்பாராத அரவிந்த் கெஜ்ரிவால், இந்த சம்பவத்தால் மிகுந்த அதிர்ச்சியடைந்தார். அங்கு கூடியிருந்த ஆம் ஆத்மி தொண்டர்கள், தாக்கிய நபரைப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.


இந்நிலையில், தன்மீதான தாக்குதல் குறித்து கெஜ்ரிவால் பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “மோதி நகர் பிரச்சாரத்தில் ஒருவர் என்னைத் தாக்கினார். இது கடந்த ஐந்து ஆண்டுகளில் என் மீது நடத்தப்பட்ட ஒன்பதாவது தாக்குதலாகும். முதல்வரான பிறகு மட்டும் ஐந்து முறை தாக்கப்பட்டுள்ளேன். எந்த முதல்வரும் என்னைப்போல பலமுறை தாக்குதலுக்கு உள்ளாகியிருக்க மாட்டார் என்று கருதுகிறேன்.


மற்ற எல்லா மாநிலங்களிலும் முதலமைச்சரின் பாதுகாப்பு, காவல் துறையின் கைகளில் இருக்கும்; காவல் துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால், தில்லியில் எதிர்க்கட்சியான பாஜக-வின் கட்டுப்பாட்டில்தான் காவல் துறை இருக்கிறது. எனவே, எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது பாஜகவுடைய பொறுப்பு; ஆனால், ஆம் ஆத்மியை அழிக்க பாஜக தன்னாலான சிறப்பான முயற்சிகளைச் செய்து வருகிறது.என்னுடைய அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தினார்கள். தில்லி காவல் துறை என் வீட்டில் சோதனை நடத்தியது. 33 வழக்குகளை என் மீது பதிவு செய்திருக்கிறார்கள். என்


உயிரையும் எடுக்க விரும்புகிறார்கள். இது என் மீது நடத்தப்பட்டது தாக்குதல் அல்ல; தில்லி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மீது நடத்தப்படும் தாக்குதல்.கல்வி, சுகாதாரம், மின்சாரம், தண்ணீர் வசதிகள் எனப் பல வேலைகளை நாங்கள் மக்களுக்குச் செய்து கொடுத்துள்ளோம். ஆனால், அவர்கள் (பாஜக) என்ன செய்தார்கள் என்று மக்கள் கேள்வி கேட்பார்கள் என்ற பயம் அவர்களுக்கு வந்துவிட்டது.”இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

;