tamilnadu

img

மருத்துவ ஆக்சிஜன் தேவை 350 மெட்ரிக் டன்னாக அதிகரிப்பு... தமிழக அரசு விரைந்து செயல்பட சு.வெங்கடேசன் எம்.பி., வலியுறுத்தல்....

மதுரை:
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவை 350 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.  நாம் அபாயக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். எனவே தமிழக அரசு விரைந்து நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி.வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 

திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு தினசரி விநியோகிக்கப்படும் ஆக்சிஜன் அளவு 5 மெட்ரிக் டன்னாக இருக்கிறது. ஆனால் தினசரி தேவையோ 7 மெட்ரிக் டன். தர்மபுரி மாவட்டத்துக்கு தினசரி ஒரு மெட்ரிக் டன் விநியோகம் இருக்கிறது. ஆனால் தேவையோ தினசரி 3 மெட்ரிக் டன்.நாமக்கல் மாவட்டத்துக்கு நாள்தோறும் 6 மெட் ரிக் டன் விநியோகிக்கப்படுகிறது. ஆனால் தேவையோ 10 மெட் ரிக் டன்னாக இருக்கிறது. திருச்சி மாவட்டத்துக்கு கடந்த ஒரு வாரத்தில் 10 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தினசரி தேவையோ 5 மெட்ரிக் டன்.தேனி மாவட்டத்துக்கு கடந்த ஒரு வாரத்தில் விநியோகிக்கப் பட்டுள்ள அளவு 5 மெட்ரிக்டன். ஆனால் தேவையோ ஒரு வாரத்துக்கு 15 மெட்ரிக் டன். கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கடந்த நான்கு நாட்களாக விநியோகம் எதுவும் செய்யப்படவில்லை. தேவையோ தினசரி ஒரு மெட்ரிக் டன்னாக இருக்கிறது.தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆக்சிஜன் தேவையின் அளவு தினசரி கூடிக்கொண்டிருக்கிறது, பற்றாக்குறையின் அளவும் வேகமாக கூடிக்கொண்டிருக்கிறது.அரசிடம் இப்பொழுது எதிர்பார்ப்பது கூடுதல் திட்டமிடலும், விரைவான செயல்பாடும்தான்.

அபாயகட்டத்தை நெருங்குகிறோம்
தமிழகத்தின் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி திறன் 400 மெட்ரிக் டன். ஏப்ரல் மாத மத்தியில் நமது மருத்துவ பயன்பாட்டிற்கான ஆக்சிஜன் தேவை 240 மெட்ரிக் டன்னாக இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக தமிழகத்தின்  தேவை 350 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.  நாம் அபாயகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். எனவே தமிழக அரசே, விரைந்து நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;