districts

img

தேனிக்கு வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்

தேனி, மே 8: ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தேர்தல் ஆணையத்தின் மூலம் ஏதாவது சூழ்ச்சி செய்திருக்கலாம்; அப்படி ஏதாவது நடந்தால், அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்கள் கொந்தளிப்பார்கள் என தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.தேனி வட்டாட்சியர் அலுவல கத்திற்கு செவ்வாயன்று திடீரென்று கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 50 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வந்தன.வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18 அன்றே முடிவடைந்து விட்ட நிலையில்,தேனி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வந்தது அரசியல் கட்சிகளுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.இதையடுத்து திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி, சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் வட்டாட்சியர் அலு வலகத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ், காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்த சாமி ஆகியோர் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் தான் இடம் மாற்றப்பட்டுள்ளது, இது வழக்கமான நடைமுறைதான் என்று அரசியல் கட்சி நிர்வாகிகளிடம் விளக்கம் அளித்தனர்.தேனி மாவட்டத்தில் உள்ள இரண்டு வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவில் தவறு நடந்திருப்பதாக மாவட்ட தேர்தல் பிரிவு தமிழக தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளது. இதனடிப்படையில் அங்கு மறு வாக்குப் பதிவு நடத்துவதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால், வாக்குப் பதிவு நடத்துவதற்கு முன்னேற்பாடாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் விளக்கம் அளித்தனர். பின்னர், கோயம்புத்தூரி லிருந்து மின்னணு வாக்குப் பதிவு கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலக அறையைத்திறந்து, அவை பயன்படுத்தப்படாத மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்தானா என்பதை தெரிந்து கொள்வதற்கு அரசியல் கட்சிகள் சார்பில் பிரதிநிதிகள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. அங்கு காவல்துறையினர் பாது காப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இளங்கோவன் சந்தேகம்

இந்த நிலையில் புதன்கிழமை காலை தேனி ஆட்சியர் அலுவல கத்திற்கு வந்த தேனி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.மகராஜன் ஆகியோர், வாக்குப்பதிவு நடவடிக்கைகள் முடிவடைந்த நிலையில் தேனிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது, சட்டவிரோத செயல் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:கோயம்புத்தூரிலிருந்து தேனிக்கு வந்துள்ள 50 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களையும் உடனடியாகத் திருப்பியனுப்ப வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நல்ல முறையில் வாக்குப் பதிவு நடந்துள்ள நிலையில், இரு வாக்குச்சாவடிகளுக்கு மறு வாக்குப் பதிவுநடத்துவது என்ற பேச்சுக்கே இட மளிக்கக் கூடாது என்று ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளோம்.மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை திரும்ப அனுப்புவது குறித்து ஆட்சியர் உத்தர வாதம் அளிக்கவில்லை. எங்களது கோரிக்கைகளை தேர்தல் ஆணை யத்திற்கு தெரிவித்து, அவர்களது உத்தரவின்படி நட வடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.தேனிக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டிருப்பதற்கான காரணம் அதிகாரிகளுக்கு தெரிய வாய்ப் பில்லை. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தேர்தல் ஆணையத்தின் மூலம் ஏதாவது செய்திருக்கலாம். அப்படி ஏதாவது நடந்தால், மாவட்டத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.தேனி மாவட்ட திமுக பொறுப்பா ளர் நா.ராமகிருஷ்ணன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் டி.வெங்க டேசன், தாலுகா செயலாளர் சடையாண்டி, சிபிஐ மாவட்டச் செயலாளர் பெத்தாட்சி ஆசாத், விடுதலைச்சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் நாகரத்தினம், ஆண்டி பட்டி திமுக வேட்பாளர் மகாராஜன், பெரியகுளம் திமுக வேட்பாளர் சரவணக்குமார் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.    (ந.நி.)


தேனி ஆட்சியரகத்தில் புகார் அளித்த தேனி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.மகாராஜன் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்.

;