tamilnadu

img

மேகதாது அணைக்கு எதிராக அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் 

மேகதாது அணைப்பிரச்னை தொடர்பாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் இன்று மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 13 கட்சிகளின் சார்பில் அதன் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அனைத்து கட்சிகளும் தமிழக அரசால் எடுக்கப்படும் முடிவுக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தன. 

அதன் பின் கீழ்கண்ட மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின் முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது. அதை மீறி, தற்போது மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளைக் கர்நாடக அரசு முழு முனைப்புடன் செய்து வருவதும் மிகவும் கண்டனத்திற்குரியது. இத்திட்டத்தினால் தமிழ்நாடு விவசாயிகளுக்குத் தேவையான நீர் கிடைப்பது பாதிப்படையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிரான இத்தகைய முயற்சி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாட்சிமைக்கு விடப்படும் சவாலாகும். எனவே, கர்நாடக அரசின் இத்திட்டத்திற்கு இதில் தொடர்புடைய ஒன்றிய அரசின் அமைச்சகங்கள் எவ்விதமான அனுமதிகளையும் வழங்கக்கூடாது என ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்வது,

அணைக் கட்டும் முயற்சிகளைத் தடுப்பதில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநிலத்தில் அனைத்து கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் வழங்கும்.

தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பை முழுமையாகப் பிரதிபலிக்கும் வகையில், இத்தீர்மானங்களை ஒன்றிய அரசிடம் அனைத்து கட்சியினரும் நேரில் சென்று முதற்கட்டமாக வழங்குவது. அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில்  நிலுவையிலிருக்கும் வழக்கு உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகள் மற்றும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது என மூன்று தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

;