tamilnadu

img

உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழப்பு - மருத்துவமனையை தற்காலிகமக மூட உத்தரவு!

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் B.P ஜெயின் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த செல்வநாதன் என்பவரின் மகன் ஹேமச்சந்திரன்(26). பிஎஸ்சி ஐடி முடித்துவிட்டு டிசைனிங் வேலை செய்து வருகிறார். இதில் ஹேமச்சந்திரன் உடல் பருமன் காரணமாக எடையைக் குறைக்கவேண்டும் என்பதற்காக யூடியூப் மூலமாக மருத்துவர்களை தேடியுள்ளார்.  அப்போது சென்னை பம்மலில் உள்ள B.P ஜெயின் தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் 22ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பை நீக்க முடிவு எடுக்கப்பட்டது. ஹேமச்சந்திரனுக்கு கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் போதுமான மருத்துவ உபகரணங்கள் இல்லையென்றும், தவறான சிகிச்சையால்தான் தனது மகன் உயிரிழந்து விட்டதாகவும் ஹேமச்சந்திரன் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

அதன் அடிப்படையில், தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்தார்.இதனையடுத்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு, பம்மல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் மருத்துவமனை ஊழியர்கள், அறுவை சிகிச்சையில் பங்கேற்ற நபர்கள், உயிரிழந்த ஹேமச்சந்திரனின் குடும்பத்தினர் என அனைவரிடமும் விசாரணை நடத்தியது

சுகாதாரத் துறை அதிகாரிகள் குழு ஆய்வு செய்ததில், தனியார் மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த தனியார் மருத்துவமனை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், தனியார் மருத்துவமனையில் உயிர்காக்கும் சிகிச்சைக்கான கருவிகள் போதுமான அளவு இல்லை, டெக்னீசியன்கள் போதுமான அளவு இல்லை, அறுவை சிகிச்சைக்கு முன்பு பெற்றோர்களிடம் உரியத் தகவலை தெரிவித்து கையெழுத்து பெறவில்லை, அறுவை சிகிச்சைக்கான போதிய பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இல்லை, அவசரக்கால மருத்துவர்கள், கருவிகள் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல தவறுகள் மருத்துவமனை மீது உள்ளதால் தற்காலிகமாக மூட வேண்டும், மேலும் உரிய மருத்துவர்கள் மற்றும் சிகிச்சைக்கான கருவிகளை அமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது, மறு உத்தரவு வரும் வரை உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் யாரையும் மருத்துவமனையில் அனுமதிக்கக்கூடாது எனவும் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

;