tamilnadu

img

தேர்தலுக்கு பிறகு மோடி, எடப்பாடி ஆட்சி இருக்காது தருமபுரியில் கி.வீரமணி பேச்சு

தருமபுரி, ஏப்.15- தேர்தலுக்கு பிறகு மத்தியில் பாஜக ஆட்சி இருக்காது. தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி இருகாது என தருமபுரியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார், சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் பாப்பிரெட்டிபட்டி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணி மற்றும் அரூர்தொகுதி திமுக வேட்பாளர் செ.கிருஷ்ணகுமார் ஆகியோரை ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் அரூர் மற்றும் தருமபுரியில் பிரச்சாரபொதுக்கூட்டம் நடைபெற்றது. தருமபுரியில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் இ.மாதன் தலைமை வகித்தார். முன்னாள் மண்டல செயலாளர் கருபாலன் வரவேற்றார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: தேர்தலில் தோல்வி முகத்தை கண்டவர்கள் வன்முறையில் ஈடுபடலாம் என கருதி எங்களுக்கு பேச தடை விதித்திருக்கிறார்கள். நாட்டில் வழங்கி இருக்கிற பேச்சுரிமை மோடி அரசால் மறுக்கிப்படுகிறது.ஆர்.எஸ்.எஸ் என்னசொல்கிறதோ அதைத்தான் மோடி செய்வார். தமிழகத்தில் சில அடிமைகள் தவிர பாஜக கட்சியில் ஆள் இல்லை. இதனால் தான் தமிழக மக்கள் பாதிக்கும் போதுகண்டுகொள்வதில்லை.


கொத்தடிமையாக உள்ள தமிழக அரசும் மோடி அரசும் இணக்கமாக உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார்.தன்னை விவசாயின் மகன் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். 5 மாவட்டங்களில் விவசாயி மகன் விவசாய நிலத்தை பிடுங்கினார், இதுதான் விவசாயி மகன் செய்த வேலையா. நீதி மன்றத்தில் எட்டு வழிச்சாலைக்காக நிலம் எடுத்தது செல்லாது என்று நீதிபதிகள் தீர்ப்பு கூறியுள்ளனர்.பதவிக்காக கடைசி நேரத்தில் உண்டான கூட்டணி மாட்டுசந்தை கூட்டணி. தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சிகள் உள்ளன. ஒரே நேரத்தில் இருவரிடம் பேசினர். இரண்டு அணிகள் நிற்கிறது திமுக காங்கிரஸ் கூட்டணி, திடீர் என்று பதவிக்காக உருவான கூட்டணி அல்ல திமுக கூட்டணி போராடி வந்த கொள்கை கூட்டணி. அதிமுக கூட்டணியின் நிலை என்ன கொத்தடிமை கூட்டணி அதிமுகவை மிரட்டி பாஜக கூட்டுசேர்ந்தது. ஜெயலலிதா இருக்கும் போது பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று சொன்னவர் தேர்தல் களத்தில் மோடியா லேடியா என கேட்டவர் ஜெயலலிதா. ஆனால் ஜெயலலிதா மறைந்த பிறகு ஆட்சியை காப்பாற்றிகொள்ள பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளனர். எப்போதுஎல்லாம் அதிமுக பாஜக கூட்டுவைக்கிறதோ அப்போதெல்லாம் திமுக கூட்டணிக்கு 40 க்கு 40 கிடைத்துள்ளது.நோட்டாவுக்கும் பாஜகக்கும் தான்எப்போதும் கூட்டு. தற்போது நோட்டாவைவிட அதிக வாக்கு வாங்க வேண்டும் என்ற நோக்கில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளனர். தேர்தலுக்கு பிறகு மத்தியில் பாஜக ஆட்சி இருக்காது.


தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி இருகாது.நேருகாலத்தில் அம்பேத்கார் பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்று போராடினார். இதற்குஎதிர்ப்பு தெரிவிக்கவே. பெண்ணுரிமைக்காக தன்பதவியை ராஜினாமா செய்தார் அம்பேத்கார். அந்த காலத்தில் முடியாத சூழலில் 2006 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் சொத்துரிமையை சட்டமாக்கி இருக்கிறார்கள். பெரியாரின் தீர்மானம் காங்கிரஸ் ஆட்சியில் நடைமுறையாக்கியது. பாஜக ஆட்சியில் நீங்கள் பெண்களுக்கு என்ன செய்தீர்கள் என கேள்வி எழுப்பினார்.மேலும், 33 சதவிகித இட ஒதுக்கீடு பெண்களுக்கு வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி வழங்கி இருக்கிறது காங்கிரஸ் கட்சி. தேர்தல் முடிந்த உடன் திருப்பம் ஏற்படும். தேர்தல் நேரத்தில் பாஜக வாக்குறுதி கொடுக்கிறார்களே இதை செய்ய வேண்டாமா? மோடி என்பதன் பொருள் என்ன செருக்கு, பகட்டு, பெருமிதம் வேடிக்கை காட்டுபவர், பிணக்கு, மகுடி, ஊதுகுழல், வஞ்சகன், அகங்காரக்காரன் என்பதுதான்.மோடி ரபேல் வான்வெளி ஊழல் செய்கிறார். எடப்பாடி பழனிசாமி தரைவழி ஊழல்செய்கிறார் என குறிப்பிட்டார்.


எனவே ஊழல் ஆட்சிகளுக்கு முடிவுகட்ட உதசூரியன்சின்னத்துக்கு வாக்களித்து மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் கொண்டுவர ஆதரவு தரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.இப்பொதுக்கூட்டத்தில் திக மாநில பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகர், மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன், மாவட்ட செயலாளர் அ.தமிழ்செல்வன், மகளிர் அணி மாநிலதலைவர் தகடூர் தமிழ்செல்வி, மண்ட தலைவர் வி.சிவாஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார், மதிமுக மாவட்ட செயலாளர் அ.தங்கராசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் த.ஜெயந்தி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

;