tamilnadu

img

‘புதிய இந்தியாவின் புதிய ஹிட்லர்’ பிரதமர் மோடி - மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தாக்கு

புதுதில்லி, ஆக. 20-
மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா செய்தித் தொடர்பாளரான சந்தீப் தேஷ்பாண்டே, பிரதமர் நரேந்திர மோடியை, ‘புதிய இந்தியாவின் புதிய ஹிட்லர்’ என்று தாக்கியிருக்கிறார்.
அமலாக்கத்துறையினர் மும்பையில் உள்ள கோஹினூர் வழக்கு தொடர்பாக, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷியின் மகனான உன்மேஷ் ஜோஷியை குடைந்து குடைந்து விசாரணை செய்து கொண்டிருக்கிறது. மேலும் அமலாக்கத்துறையினர் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் தலைவரான ராஜ் தாக்கரேயையும் இது தொடர்பாக, விசாரணை செய்திட வேண்டும் என்று கோரி, வரும்  ஆகஸ்ட் 22அன்று ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பியிருக்கிறார்கள்.
இதுதொடர்பாக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் செய்தித் தொடர்பாளரான சந்தீப் தேஷ் பாண்டே, தங்கள் அமைப்பின் தலைவருக்கு அழைப்பாணை அனுப்பியதற்காக, மோடி அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். “அமலாக்கத்துறையினர் கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் பாஜக-வினர் எவரையும் ஏன் விசாரிக்கவில்லை,” என்று அவர் கேள்வி எழுப்பினார். இத்தகைய ‘ஹிட்லர் ஆட்சிதர்பாருக்கு’ எதிராக எங்கள் போராட்டம் வரவிருக்கும் காலங்களில் தீவிரமடையும் என்று அவர் கூறினார்.
“ராஜ் தாக்கரேயின் பேச்சுக்கள், மக்களவைத் தேர்தலின்போது பாஜகவிற்கு எதிராக மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தின. இது நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலின்போது தொடரக்கூடாது என்பதற்காகவே ராஜ் தாக்கரேக்கு அமலாக்கத்துறையினர் அறிவிப்பு அனுப்பி இருக்கின்றனர்,” என்றும் “இது அரசியல்பழிவாங்கும் நடவடிக்கையே தவிர வேறல்ல” என்றும்  அவர் தெரிவித்தார்.     
“ராஜ் தாக்கரே ‘புதிய இந்தியாவின் புதிய ஹிட்லருக்கு’ எதிராக எதிர்க்கட்சியினரை ஒன்றுபடுத்திக் கொண்டிருப்பதால், பாஜகவிற்கு நடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதன் பிரதிபலிப்பே இந்த விசாரணைகள் என்று அவர் கூறினார்.
மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனையோ அல்லது ராஜ் தாக்கரேயோ பாஜகவினரின் மிரட்டல் அரசியலுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டார்கள். எதேச்சதிகாரத்திற்கு எதிராக எங்கள் போராட்டம் தொடரும் என்றும் சந்தீப் தேஷ்பாண்டே கூறினார்.
(ந.நி.)
 
 

;