tamilnadu

img

நிதியின்மையால் மூடப்படும் அரிஜன சேவா பள்ளிகள்

மதுரை:
மகாத்மாகாந்தியால் தொடங்கப்பட்டு செயல்பட்டுவரும் ஹரிஜன சேவாபள்ளிகள், விடுதிகளுக்கு கடந்த மூன்றுஆண்டுகளாக பாஜக அரசு நிதி  வழங்கமறுத்துவருகிறது. இதனால் அவை மூடப்படும் அபாயத்திற்கு ஆளாகியுள்ளது. இதில் படிக்கும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகள் குழந்தைத் தொழிலாளர்களாகும் அபாயம் உருவாகியுள்ளது.காந்தியடிகளால் கடந்த 1932-ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி ஹரிஜனசேவா பள்ளி தொடங்கப்பட்டது. தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு  நாடுமுழுவதும் 26 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. 1939-ஆம் ஆண்டு வைத்தியநாதய்யரைத் தலைவராகக் கொண்டு ஹரிஜன சேவா சங்கத்தின் தமிழ்நாடு கிளை தொடங்கப்பட்டது.

மதுரை
இந்தச் சங்கத்தின் கீழ் மதுரை, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் உண்டு உறைவிடப் பள்ளிகள் மத்திய அரசின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்டன. இதனால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய அரசின் நிதியுதவி இல்லாததால் இந்தப் பள்ளிகளில் படிக்கும் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் குழந்தைத் தொழிலாளர்களாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து ஹரிஜன சேவா சங்கத்தின் தமிழக நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘வரலாற்றுத் தேவையின் பொருட்டும், தாழ்த்தப்பட்ட மக்களின் சமூகநீதியைக் கருத்தில் கொண்டும் காந்தியடிகளால் ஹரிஜன சேவா சங்கம் நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. அப்போது மதுரையின் புகழ் பெற்ற காங்கிரஸ்காரராக இருந்த என்.எம்.ஆர் சுப்புராமன், தன்னுடைய மாளிகையை தானமாக வழங்கினார்.சமூகத்தின் அடித்தட்டில் உழன்றுவரும் மக்களின் குழந்தைகளும் கல்வி பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இந்தச் சங்கம் செயல்படத் தொடங்கியது. நந்தனார் விடுதி என்ற பெயரிலான இந்தக் கட்டடம் என்.எம்.ஆர்.சுப்புராமன் நினைவு உறைவிட ஆரம்பப்பள்ளி என்ற பெயரில்  நிதி குறைபாடின்றி இயங்கி வந்தது. கடந்த மூன்றாண்டுகளாக மத்திய அரசின்நிதிவழங்கப்படாததன் காரணமாக, இங்குபயிலும் 125 மாணவ, மாணவிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்தப் பள்ளிக்காவது தமிழக அரசின்உதவி ஓரளவிற்கு உள்ளது. 

திருக்கோவிலூர்
திருக்கோவிலூரில் செயல்படும் ஹரிஜன சேவா சங்க பள்ளிக்கு மத்திய அரசின் நிதி மட்டுமே ஆதாரமாக உள்ளதால், அதன் செயல்பாடு கேள்விக்குறியாகியுள்ளது’ என்றார்.மேலும் அவர் கூறுகையில், நாடு முழுவதும் இதே நிலைதான். ஹரிஜன சேவா சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் சங்கர் குமார் தன்யால்,  கொல்கத்தாவில் நடத்தி வந்த இது போன்ற பள்ளியை நிதியின்மை காரணமாக மூடிவிட்டார்.தற்போது அதை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்.  கடந்த சுதந்திர தினத்தன்று விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார், திருக்கோவிலூர் பள்ளிக்கு சிறப்புவிருந்தினராக வந்திருந்தார். அப்போது நாங்கள் அவரிடம் கோரிக்கை வைத்தோம். உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறார். நாடு முழுவதும் ஹரிஜன சேவா சங்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் எதிர்கால நலன் கருதி மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள்’ என்றார்.விளிம்பு நிலை மக்கள் தங்களது குழந்தைகளின் கல்விக் கனவை நிறைவேற்ற இது போன்ற பள்ளிகளில் சேர்த்து படிக்கவைக்கிறார்கள் ஆனால்,மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் தங்களின் கடமையை தட்டிக் கழிப்பதுநியாயமல்ல. காந்தியின் கனவும் இதோடுசேர்ந்தேயிருக்கிறது என்பதை நாம் சொல்லி அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. மகாத்மாவின் கனவை நனவாக்க. விளிம்பு நிலையில் உள்ள  குழந்தைகளின் கல்விக் கனவை நனவாக்க உரிய நிதியை ஹரிஜன் சேவா பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய  மத்தியஅரசு முன்வரவேண்டும்.

===ஜெ.பொன்மாறன்===

;