tamilnadu

குற்ற வழக்கு விவரங்களை தெரிவிக்காத காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை

சென்னை:
குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை தெரிவிக்காத காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம்  எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும்குற்ற வழக்குகளில் காவல்துறை போலீஸ் தரப்பின் விளக்கம் கேட்கப்படும்.  சில வழக்குகளில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிடப்படும். இதுபோன்ற நிலைகளில் குற்றவியல் வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளரிடம்  விளக்கம் கேட்கும்போது, உரிய தகவல்அளிக்கப்படுவது இல்லை. விசாரணைக்கு காவல்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகுவதும் இல்லை என்ற குற்றச்சாட்டு அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் முன்பு குற்றவியல் வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அதில், பல வழக்குகளுக்கு காவல்துறை தரப்பில் இருந்து பதில் வரவில்லை என்று நீதிபதி கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் வழக்குகளின் விசாரணையை தேவையில்லாமல் தள்ளிவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையடுத்து காவல்துறையினரின் நடவடிக்கைக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.மேலும், வழக்கிற்கு காவல் ஆய்வாளர்கள் ஏன் பதில் அளிப்பது இல்லை? என தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி, சென்னை ஆணையர்  ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் வருகிற 13 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.இதையடுத்து நீதிபதி பி.வேல்முருகன் முன்பு, மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர்  என்.நடராஜன் வியாழனன்று ஆஜராகி, ‘வழக்கு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க அனைத்து காவல் அதிகாரிகளுக்கும், டி.ஜி.பி. மற்றும் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளனர். இனிமேல் இதுபோன்ற நிலை ஏற்படாது. எனவே இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவை திரும்பப் பெற வேண்டும்’ என்றும் கோரிக்கை விடுத்தார்.இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ‘தமிழக டி.ஜி.பி., காவல்துறை ஆணையர்  நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கிறேன். எதிர்காலத்தில் இதுபோன்ற நிலை மீண்டும் ஏற்பட்டால் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெளிவுபடுத்துகிறேன்’ என்று நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். 

;