அரசியல் பழிவாங்கலுக்கு எதிராக சட்டப்போராட்டம் தொடரும்! – எம்.ஏ.பேபி
yesterday
<p>முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் நோக்கில் அமலாக்கத்துறை மேற்கொள்ளும் முயற்சியை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எதிர்த்துப் போராடுவோம் என சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார்.</p><p>இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:</p><p>“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பயமுறுத்திவிடலாம் அல்லது பினராயி விஜயனை முடக்கிவிடலாம் என்று அமலாக்கத்துறை நினைத்தால், அது மிகப்பெரிய தவறு! </p><p>கேரள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்து, நாட்டின் மூன்று நீதிமன்றங்கள் — லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் — ஏற்கனவே தள்ளுபடி செய்து குப்பையில் வீசிய அதே வழக்கில், தோழர் விஜயனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய கேரள காவல்துறையை அமலாக்கத்துறை கட்டாயப்படுத்த முயல்கிறது.</p><p>அரசியல் பழிவாங்கும் நோக்கத்திற்காக மோடி அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளை, குறிப்பாக அமலாக்கத் துறையைத் தவறாகப் பயன்படுத்துகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இப்போது, கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான UDF அரசு தங்கள் விருப்பப்படியே செயல்பட வேண்டும் என்று பாஜக எதிர்பார்க்கிறது; கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரும் அதற்குத் தங்கள் சம்மதத்தைத் தெரிவித்துவிட்டார்.</p><p>நாளுக்கு நாள், கேரளாவில் யார் யாருக்கெல்லாம் இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்பது மேலும் மேலும் தெளிவாகி வருகிறது. இத்தகைய தீய நோக்கங்களைக் கொண்ட நடவடிக்கைகளை நாங்கள் அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எதிர்த்துப் போராடுவோம்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>
