நெல், கரும்புக்கான ஊக்கத்தொகை உயர்வு! - சிபிஎம் வரவேற்பு!
yesterday
<p>தமிழ்நாடு அரசு 2026-27 ஆம் ஆண்டுக்கு நெல், கரும்புக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.</p><p>இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:</p><p>“தமிழ்நாடு அரசு 2026-27 ஆம் ஆண்டுக்கு நெல், கரும்புக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவித்துள்ளது. குறிப்பாக, கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.710 உயர்த்தி 4000 ரூபாயாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.</p><p>ஒன்றிய அரசு இந்த ஆண்டு சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2461, பொது ரக நெல்லுக்கு ரூ.2441 என்று விலை அறிவித்தது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் சன்ன ரக நெல்லுக்கு ரூ.289 மற்றும் பொது ரக நெல்லுக்கு ரூ.159 உயர்த்தி முறையே ரூ.2750, ரூ.2600 என்று உயர்த்தப்பட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.</p><p>அதே நேரத்தில், சன்ன ரகத்துக்கும், பொது ரகத்துக்குமான ஊக்கத்தொகை வித்தியாசம் என்பது மிகவும் அதிகமாக உள்ளதை சுட்டிக்காட்டுகிறோம். தமிழ்நாட்டில் பொதுவான ரக நெல் தான் அதிகமாக உற்பத்தியாகிறது. கடந்த ஆண்டு இரண்டு ரகத்துக்குமான விலை வித்தியாசம் ரூ.45 ஆக இருந்தது. மத்திய அரசு அறிவித்துள்ள விலை வித்தியாசம் ரூ.20 ஆக இருக்கிறது என்பதையும், வருங்காலத்தில் இந்த விலை வித்தியாசம் தவறான முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளப்படும் வாய்ப்புள்ளது என்பதையும் கவனத்தில் கொண்டு, பொது ரகத்துக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.</p><p>கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைப்பதற்கு போதுமான சேமிப்பு கிடங்குகள் துரிதமாக உருவாக்கப்பட வேண்டும்; அதற்குரிய திட்டமிடுதலையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும், தவெக தேர்தல் வாக்குறுதிப்படி நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3000, கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4500 என்பதையும் படிப்படியாக உயர்த்தி வழங்க முன்வர வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>
