india

img

இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருக்க வேண்டும் -  பருவநிலை ஆய்வாளர்  எச்சரிக்கை 

பருவநிலை மாறுதலால் அதிகப்படியாகக் கடல் மட்டம் உயர்தல், வெள்ளப்பெருக்கு, கடும் வறட்சி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள இந்தியா தயாராக வேண்டும் என்று பருவநிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியா கடந்த ஆண்டுகளை விட அதிகமான இயற்கை பேரிடர்களைச் சந்தித்து வருகிறது. இந்தியாவைப் போன்ற உலக நாடுகளும் கனமழை, வெள்ளம், காட்டுத்தீ என இயற்கை பேரிடர்களைத் தொடர்ந்து சந்தித்து வருகின்றன. இந்நிலையில், பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் வானிலை மாறுதல்கள் குறித்த சர்வதேச கருத்தரங்கு கடந்த 23 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஆய்வறிக்கை தாக்கல் செய்துள்ள பருவநிலை ஆய்வு வல்லுநர் ஸ்வப்னா பனிக்கல், கடல் மட்டம் உயர்வால் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்க்கொள்ள இந்தியா தயாராக இருக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கியுள்ளார். 

இதுகுறித்து அவர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், 1970ஆம் ஆண்டிலிருந்து 2000ஆம் ஆண்டு வரை சர்வதேச அளவில் கடல் மட்டம் 1.8 மி.மீ உயர்ந்துள்ளது. ஆனால் 1993ல் இருந்து 2017ஆம் ஆண்டு வரை இது 3.3. மி.மீ உயர்ந்துள்ளது. இது முந்தைய அளவீட்டை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இந்த புள்ளிவிவரங்களை வைத்துப் பார்த்தால் 2050ஆம் ஆண்டில் 15 முதல் 20 செ.மீ அளவுக்குக் கடல் மட்டம் உயரும். இதனால் இந்தியக் கடலோர பகுதிகளில் புவியியல் அமைப்பே மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார். 

அதேபோல் கடல் மட்ட உயர்வினால் அதிக புயல்கள் ஏற்படக்கூடும் என்றும், கடலில் எழும்பும் அதிக உயர அலைகளும் கடல் மட்டத்தை மேலும் உயர்த்தும் ஆபத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மழைக்காலங்களில் அதி கனமழை இருப்பது போன்றே பருவமழை காலங்களில் மழை பொய்த்து கடும் வறட்சி நீடிக்கவும் வாய்ப்புள்ளது. இந்த கடல் மட்டம் உயர்வால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்திக்கும். கடும் சவால்களை எதிர்கொள்ள இம்மாநிலங்கள் தயாராக இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அண்மையில் கிளாஸ்கோவில் காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைக் குறைப்பது தொடர்பான பருவநிலை மாநாடு நடைபெற்றது. இதில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் கலந்துகொண்டது.  இருப்பினும் இந்த மாநாடு தோல்வியடைந்துவிட்டது என்று கிரெட்டா தன்பர்க் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

;