ஒன்றிய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வரும் அரசியல் கட்சிகளை ஒடுக்க புலனாய்வு அமைப்புகளை தொடர்ந்து ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துகிறது என்றும், அரசமைப்பு சாசனத்தின்படி நிறுவப்பட்ட அமைப்புகளில் ஒன்றிய அரசின் தேவையற்ற தலையீடு இருப்பதாகவும் முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
கொல்லத்தில குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக குடிமக்கள் பாதுகாப்புக் குழு சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தை புதனன்று (மார்ச் 28) துவக்கி வைத்து அவர் மேலும் பேசியதாவது: தில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளும் கவலை தெரிவித்தன. புலனாய்வு அமைப்புகளால் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது இது முதல் முறையும் அல்ல, கடைசி முறையும் அல்ல. இதுபோன்ற நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தொடரவே செய்யும்.
நாடு கண்டிராத மிகப்பெரிய ஊழல் தேர்தல் பத்திரம். கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே தேர்தல் பத்திரங்கள் வேண்டாம் என்று கூறின. நாட்டில் ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து பலர் தீவிரமாக சிந்திக்கின்றனர். "இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள். எவ்வளவு காலம் இது நீடிக்கும் என்ற கேள்வியை மக்கள் கேட்க ஆரம்பித்தனர். நம் நாடு இப்படியே இருக்க முடியாது என்ற எண்ணம் இந்திய மக்களுக்கு வந்ததுள்ளது. பணக்காரர்களை மிகப்பெரும் பணக்காரர்களாகவும், ஏழைகளை மிகவும் ஏழைகளாகவும் ஒன்றிய அரசு மாற்றி வருகிறது என்று முதல்வர் கூறினார்.