tamilnadu

img

ஆண் குழந்தைக்கு ஜெயலலிதா என்று பெயர் சூட்டிய அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு, ஏப். 5-

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது அமைச்சர், ஆண் குழந்தைக்கு ஜெயலலிதா என்று பெயர் சூட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக எம்.எஸ்.எம். ஆனந்தன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கோபி ஒன்றியம் பொலவக்காளிபாளையம், பெரியார் நகர், இந்திரா நகர், கடுக்காம்பாளையம் பகுதிகளில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வியாழனன்று தீவிர பிரசாரம் ஈடுபட்டார். அவருடன் வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், அந்தியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜா என்கிற ராஜாகிருஷ்ணன் ஆகியோரும் இருந்தனர்.அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பெரியார் நகர் பகுதிக்கு சென்றபோது, அந்த பகுதியை சேர்ந்த செல்வராஜ்-பிரியா தம்பதியினர், தங்கள் குழந்தைக்கு பெயர் சூட்ட வேண்டும் என்று அமைச்சரிடம் கேட்டுக்கொண்டனர். அக்குழந்தை 10 மாதம் ஆன ஆண் குழந்தையாகும்.குழந்தைக்கு ஜெயலலிதா என்று பெயர் சூட்டுகிறேன் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். அதைக்கேட்டு குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பெற்றோர் அமைச்சரிடம் பெண் குழந்தை அல்ல, ஆண் குழந்தை என்று கூறினர். அருகில் இருந்தவர்களும் அமைச்சரிடம் விவரத்தை கூற, உடனடியாக சமாளித்துக்கொண்ட அமைச்சர், பிரசார வேனை நிறுத்திவிட்டு இருந்து கீழே இறங்கி வந்தார். அவருடன் வேட்பாளர் மற்றும் எம்.எல்.ஏ.வும் வந்தனர். குழந்தையை கையில் வாங்கிய அமைச்சர் ராமச்சந்திரன் என்று மீண்டும் பெயர் சூட்டினார்.ஆண் குழந்தைக்கு ஜெயலலிதா என்று அமைச்சர் பெயர் சூட்டியதும், பின்னர் ராமச்சந்திரன் என்று பெயர் சூட்டி குழந்தையை வாழ்த்தியதும் தேர்தல் பிரச்சாரத்தை பார்த்து கொண்டு இருந்தவர்களுக்கு, உடன் வந்தவர்களும் வாய்விட்டு சிரித்தனர்.

;