tamilnadu

img

சாதிய வன்மத்துடன் கட்டிய சுவர் விழுந்து 17 பேர் பலி

மேட்டுப்பாளையம் அருகே பயங்கரம்

கோயம்புத்தூர், டிச.2–  அருந்ததிய மக்கள் தங்களது பார்வையில் படக்கூடாது என்கிற சாதிய வன்மத்தோடு கட்டப்பட்ட சுவர் இடிந்து விழுந்து மேட்டுப்  பாளையம் அருகே அருந்ததிய  மக்கள் 17 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் பகுதி ஏடி காலனியில் ஏராளமான அருந்ததிய குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் சக்கரவர்த்தி துகில் மாளிகை என்கிற பிரபல ஜவுளிக் கடையின் உரிமை யாளர் சிவசுப்பிரமணியன் மற்றும் ஆறுமுகம் ஆகியோரது சொகுசு வீடு உள்ளது. அருந்ததிய மக்கள் குடியிருப்பு அருகே இவரின் வீடு இருப்ப தால் சாதிய வன்மத்துடன் 80 அடி நீளத்தில், 20 அடி உயரத்தில் நீண்ட சுவர் ஒன்றை எழுப்பி யுள்ளார். இதனால் மழை பெய்தால் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் அருந்ததிய மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியிலேயே ஒவ்வொரு முறையும் மழைநீர் தேங்கி நின்று வந்துள்ளது. ஆகவே, இச்சுவரை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

மேலும், இந்த சுவரானது சாதிய ஆதிக்க மனப்பான்மையோடு கட்டப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி அருந்ததிய மக்கள் மாவட்ட ஆட்சி யர் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் ஏற்கனவே பலமுறை மனுக்கள் அளித்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் இதுகுறித்து எவ்வித நடவடிக்கை யும் மேற்கொள்ளாமல் அலட்சியப்படுத்தியே வந்துள்ளனர்.  இந்நிலையில்தான் கடந்த இரண்டு நாட் களாக மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக, ஏற்கனவே பலவீனமாக இருந்த சுற்றுச்சுவர் திங்களன்று அதிகாலை இடிந்து அருந்ததியர் குடியிருப்புகளின் மீது விழுந்தது. இதில் நான்கு வீடுகள் முற்றிலும் மண் மூடியதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் உள்ளிட்டு பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியாகினர். 

இந்த கோர சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஜே.சி.பி உதவியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி  டிபாடுகளுக்குள் சிக்கியவர்களை ஒவ்வொருவ ராக மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனையில் படுகாயத்துடன் அனு மதிக்கப்பட்ட பலர் அடுத்தடுத்து உயிரிழந்த தால் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக அதி கரித்துள்ளது. குரு (45), அரிசுதா (16), ராமநாதன் (20), அட்சயா(7), லோகுராம்(7), ஓவியம் மாள்(50), நதியா(30), சிவகாமி(50), நிவேதா (20), வைதேகி(22), ஆனந்தகுமார்(46), திலாகவதி(50), அருக்காணி(55), ருக்குமணி (40), சின்னம்மாள்(70) என 11 பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள், மூன்று ஆண்கள் பலியாகியிருப்பது தெரியவந்துள்ளது. 

பொதுமக்கள் மறியல் – போலீஸ் தடியடி, கைது

இதற்கிடையே 17 பேர் பலியான சம்பவத்திற்கு காரணமான சுற்றுச்சுவர் கட்டிய வீட்டின் உரிமையாளர் மீது உரிய நட வடிக்கை எடுக்கவும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தலித் அமைப்பினர் மேட்டுப்பாளை யம் - உதகை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் தடியடி நடத்தி, கைது செய்தனர். இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சி யர் கு.ராஜமணி சம்பவ இடத்திற்கு வந்து விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விபத்துக்கு காரணமானவர் களின் மீது எவ்வித பாரபட்சமும் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறினார்.

வழக்கு பதிவு

இதற்கிடையே, சுவர் விழுந்து விபத்துக்கு  காரணமான சொகுசு வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியன் மீது, உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையில் அஜாக்கிரதையாக இருத்தல்  மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல்  உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

மார்க்சிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆறுதல் 

இதனிடையே விபத்து நடந்த இடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், யு.கே.சிவ ஞானம் மற்றும் வி.பெருமாள், சிராஜூதின், மகபுனிசா, பாட்சா உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர். இதன் பின் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவ மனைக்கு சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். 

இதனைத்தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதில், “விபத்துக்கு காரண மான சுற்றுச்சுவரின் ஆபத்தை உணர்ந்து இதனை இடிக்க வேண்டும் என பல முறை சிஐடியு பொதுதொழிலாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் அரசு நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர். ஆனால் எவ்வித நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலை யில்தான் இந்த கோர விபத்து ஏற்பட்டு 17 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து விரிவான நீதி விசாரணை நடத்த வேண்டும். இந்த விபத்துக்கு காரண மான வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு  வேலையும் வழங்க வேண்டும். இடிந்த வீடுகள் மற்றும் சேதமடைந்த வீடுகளை அரசே உடனடியாக கட்டித்தர வேண்டும். உயிரை யும், உடைமையும் இழந்த மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அரசின் நிவாரணம் இருக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.

இடிபாடுகளில் சிக்கிய உடல்களை மீட்கும் பணி நடந்த காட்சி. (உள்படம்) சொகுசு பங்களாவின் உரிமையாளர் சிவசுப்பிரமணியன்
 

;