tamilnadu

img

கோவை தொகுதி தேர்தல் முடிவை வெளியிடத் தடை கோரிய வழக்கு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்

கோவை மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆஸ்திரேலியாவில் மருத்துவராகப் பணியாற்றி வருபவர், கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தை சோ்ந்த சுதந்திர கண்ணன். கடந்த 26-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார் அதில், ‘மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கக் கோவை வந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் தனது பெயர் மற்றும் தனது மனைவி பெயர் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலிலும், 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் வாக்களித்துள்ளோம். இந்த முறை தனது பெயரும், மனைவி பெயரும் நீக்கப்பட்டுள்ளது. இதேபோல, தங்கள் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

மேலும் பெயர் நீக்கும் முன்பு முறையாக விசாரணை நடத்தப்படவில்லை. அதனால், பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து, வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அதுவரை கோவை தொகுதித் தேர்தல் முடிவுகளை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுா்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயணன் பிரசாத் அமர்வு “ தேர்தல் முடிந்து விட்டதால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. கடந்த ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட போது ஆட்சேபனை தெரிவிக்காதது ஏன்?” என்று மனுதாரரிடம் கேள்வி எழுப்பி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்

 

 

;