tamilnadu

img

இலங்கையின் பொருளாதார நெருக்கடி இந்தியாவிற்கும் ஏற்படும் : தேமுதிக தலைவர் விஜயகாந்த் எச்சரிக்கை ...

சென்னை
கடும் கடன் சுமை மற்றும் வரி முறையில் ஏற்படுத்தப்பட்ட அதிரடி மாற்றத்தால் இலங்கையில் வரலாறு காணாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். ஆளுங்கட்சி அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை நாட்டின் நிர்வாகம் காற்றாடி இல்லாமல்  அந்தரத்தில் பறக்கிறது.

இந்நிலையில், இலங்கை நாட்டின் பொருளாதார நெருக்கடி போன்று இந்தியாவிலும் ஏற்பட வாய்ப்புள்ளது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இன்றைய ஆட்சியாளர்கள் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க இலவசங்களை தருவதாக கூறுவது, தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா செய்வது போன்ற செயல்களால் மக்களை முட்டாளாக்குவது நாட்டிற்கு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும். வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேற்றமடைய செய்வதில் ஆட்சியாளர்கள் ஈடுபட வேண்டுமே தவிர, கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி திணிப்பதோடு, தலைவிரித்தாடும் லஞ்சம் மற்றும் ஊழலால் நாடு முன்னேறாமல் பொருளாதாரத்தில் மந்த நிலையை அடைய காரணமாகிறது. இலவச திட்டங்களால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் பல லட்சம் கோடி கடனில் உள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டின் கடன் சுமை ஆறு லட்சம் கோடியாக உள்ளது. விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமே பொருளாதார சரிவுதான் என்பதால், இலவச திட்டங்களை தவிர்த்து, வேலை வாய்ப்பு, உள்கட்டமைப்பு போன்ற பல்வேறு தொலை நோக்கு திட்டங்களை செயல்படுத்தி, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல் இல்லாமல், நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் வழிவகைகளை ஆராய்ந்து அதற்கான பணிகளில் தற்போது முதலே ஈடுபட வேண்டும்‍. இல்லையென்றால் இலங்கையை போன்று நெருக்கடி நிலை இந்தியாவில் ஏற்பட வாய்ப்புள்ளது" இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

;