tamilnadu

img

உழைப்பால் உயர்ந்தவர் வசந்தகுமார்: தலைவர்கள் புகழாரம்

சென்னை:
மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் சிறந்த பண்பான பேச்சு வசந்தகுமார் உழைப்பால் உயர்ந்தவர் என்று தலைவர்கள் பலரும் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

திருவிதாங்கூர் - கொச்சி சமஸ்தானத்தில் இருந்த, தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரத்தில் ஹரிகிருஷ்ண நாடார்- தங்கம்மாள் அம்மாள் தம்பதியினரின் இரண்டாவது மகனாக 1950 ஏப்ரல் 14 ஆம் தேதி பிறந்தவர். இவரது மூத்த சகோதரர் குமரி அனந்தன். தெலுங் கானா ஆளுநர் தமிழிசை இவரது அண்ணன் மகள்.தொடக்கத்தில் வி.ஜி.பி. நிறுவனத்தில் விற்பனையாளராகப் பணி செய்தார். பின்பு மளிகை கடையைத் தொடங்கினார். பிறகு, மிதிவண்டியில் வீடு வீடாக சென்று பொருட்களை விற்று, அவற்றிற்கு தவணை முறையில் பணம் வசூலித்தார். படிப்படியாக முன்னேறி வசந்த் அண்டு கோ என்னும் பெரிய வணிக நிறுவனத்தின் உரிமையாளராகத் திகழ்ந்தவர். இவர் துவக்கிய வசந்த்&கோ நிறுவனம் தமிழ்நாடு, பெங்களூர் மற்றும் புதுச்சேரி என 61 கிளைகளுடன் பரந்துவிரிந்துள்ளது. சென்னை தெருவோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் பயன்பெறும் வகையில் வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தையும் துவக்கினார்.

2008ஆம் ஆண்டு வசந்த் தொலைக்காட்சியை துவங்கினார். “வெற்றி கொடிகட்டு” எனும் இவரது பிரபல சுயசரிதை புத்தகமாகும். மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும்,  வர்த்தக அமைப்பின் தலைவராகவும் இருந்தவர்.வசந்தகுமார் மறைவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அகில இந்திய தலைவர் ராகுல் ந்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் தமிழ்நாடு தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.“விற்பனையாளராக தனது வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்த வசந்தகுமார். தனது கடின உழைப்பின் மூலம் வாழ்வில் உயர்ந்தவர் என்றும்அவரது மறைவு குடும்பத்திற்கும் கட்சிக்கும் மட்டுமல்ல, கன்னியாகுமரி மக்களவை தொகுதி மக்களுக்கும் பேரிழப்பு” என்றும் முதலமைச்சர் எடப்பாடி இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், “அரசியல்வாதியாக போராளியாக திகழ்ந்த வசந்தகுமாரின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாது” என்று  தெரிவித்துள்ளார்.திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் “சில தினங்களுக்கு முன் தான் அவரிடம் தொலைபேசியில் உடல் நலம் குறித்து விசாரித்தேன். விரைவில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அவரது மறைவு பேரதிர்ச்சியாக இருக்கிறது. கொரோனா என்ற கொடிய நோய் அவரை நம்மிடமிருந்து அநியாயமாக பிரித்து விட்டது” என இரங்கல் தெரிவித்திருக்கிறார்..

கி.வீரமணி, “உழைப்பால் உயர்ந்து அனைவரிடமும் நன் மதிப்பைப் பெற்றவரும், சட்டமன்றத்திலும் மக்களவையிலும் சிறப்பாக பணியாற்றியவரும் காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கைக்குரிய செயல் பாட்டாளராகவும் விளங்கிய வசந்தகுமாரின் மறைவு பேரதிர்ச்சி” என தெரிவித்துள்ளார்.

தேசிய ஒருமைப்பாடு...

இரா. முத்தரசன், “சிறு வயது முதலே வியாபாரத்தில் ஆர்வம் கொண்டு, சலிப்பறியா உழைப்பில் வசந்த் & கோ வர்த்தக நிறுவனத்தை உருவாக்கியவர்.  ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருபவர்.தேசிய ஒருமைப்பாட்டுக்கும், மக்கள் ஒற்றுமைக்கும் குரல் கொடுக்க வழிவகுத்தவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.வைகோ, “உழைப்பால் உயர்ந்த வசந்தகுமார் உறுதியான காங்கிரஸ் தலைவர். தன்னால் முடிந்த அளவுக்கு மக்களுக்கு உதவியவர். இவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கு இழப்பாகும்” என்று தெரிவித்துள்ளார்.திருமாவளவன், “ஏழை எளியோருக்கு ஓடியாடி உதவியவருக்கா; ஓயாமல் உழைத்தவருக்கா இந்தக் கோரக் கொடுமை? அவரது மறைவு காங்கிரசு கட்சிக்கு மட்டுமின்றி தமிழகத்துக்கே பேரிழப்பு” என்று குறிப்பிட்டிருக்கிறார்.ஜவாஹிருல்லா, “வசந்த குமார் ஒரு போதும் தனது தொடக்க காலத்தை மறவாதவர். இதன் விளைவாகத் தான் அடித்தட்டு மாணவர்களுக்கு டியூசன் நிலையங்களை தொடங்கியவர். ஒரு அரசியல் கட்சி தலைவராக மதச்சார்பின்மையில் வலுவான பற்றுடையவராகச் சிறந்து விளங்கினார்” என தெரிவித்துள்ளார்.ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

;