சிறகுகள் இருந்தால்
எனக்கும் பறக்க ஆசைதான்
பணம் இருந்தால் மற்றவர்களுக்கு
கொடுத்து உதவ எனக்கும் ஆசைதான்
உற்ற நண்பர்களோடு
எப்போதும் பேசி மகிழ்ந்திருக்க
எனக்கும் ஆசைதான்
எப்படியாவது குடும்ப கடன்களிலிருந்து
மீண்டு வந்துவிட வேண்டுமென்று
எனக்கு இப்போதும் ஆசைதான்
வீட்டின் தேவைகளையெல்லாம்
விரைவாக பூர்த்தி செய்துவிட்டு
“சூ அப்பாடா...” என்று களைப்பு அடங்கி
பிரச்சினைகள் எதுவும் அற்று நிம்மதியாக வாழ எனக்கும் ஆசைதான்
தினம் வேலை செய்து
வாங்கும் போதாதக் கூலியில்
இவற்றில் இருந்தெல்லாம்
எப்படித்தான்
அவ்வளவு இலகுவாக
என்னை விடுவித்துக்கொண்டு
வெளியில் வந்துவிட முடியும்
மக்களின் வரிப்பணத்தில்
செழிப்பாக வாழும் ஆட்சியாளர்கள்
கையில் சூலாயுதம் ஏந்தி
கழுத்தில் உத்திராட்ச கொட்டையுடன்
கரடு தரிக்க கட்டிய காவி உடையில்
பல கோடி ரூபாய் கடனில்
இந்தியாவை திருவோட்டோடு
நிற்க வைத்திருக்கும் சூழலில்
எனக்கு மட்டும்
இவற்றில் இருந்தெல்லாம் விடுவித்துக்கொண்டு
வெளியில் வந்துவிட வேண்டுமென்று
இப்ப என்ன அவசரம்...