புதுதில்லி, ஏப்.16- இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) முதுபெரும் தலைவர் தோழர் நீலிமா மைத்ரா ஏப்.12 அன்று கொல்கத்தா வில் காலமானார். அவருக்கு வயது 92. தோழர் நீலிமா மைத்ரா, இந்திய தொழிற்சங்க மையத்தின் முதுபெரும் தோழர்களில் ஒருவர்; உழைக்கும் பெண்களை அணிதிரட்டுவதில் முன்னோடியாக திகழ்ந்தவர். குறிப்பாக அங்கன்வாடி ஊழியர்களையும், பல்வேறு திட்டங் களில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களை அணிதிரட்டி அவர்களின் நலன்களுக்காக தம் வாழ்வையே அர்ப்பணித்தவர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலியும், இரங்கலும் தெரிவித்துள்ள சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென், கடந்த 60 ஆண்டு காலமாக இந்திய தொழிற்சங்க மையம் உள்பட அரசியல் மற்றும் ஸ்தாபன பணிகளில் தம்மை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டவர் தோழர் நீலிமா மைத்ரா எனக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கொல்கத்தாவில் மாணவர் இயக்கத்திலிருந்து துவங்கிய தோழர் அரசியல் வாழ்க்கை, இடதுசாரி இயக்கத்தின், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துடிப்பு மிக்க செயல்வீரராக, உழைக்கும் மக்களின் தலைவராக உயர்ந்து, பல்வேறு சங்கங்களின் தலைவராகவும் உயர்த்தியது. மேற்குவங்கத்தில் ஆளும் வர்க்க அரசால் கட்டவிழ்த்துவிடப்பட்ட அனைத்து விதமான தாக்குதல்களையும், அரைபாசிச அடக்குமுறைகளையும் எதிர்கொண்டவர் தோழர் நீலிமா என்றும் தபன்சென் குறிப்பிட்டு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். தோழர் நீலிமா அவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக பணியாற்றியவருமான - இந்தியாவில் இன்சூரன்ஸ் இயக்க ஊழியர் இயக்கத்தை உருவாக்கிய தோழர் சுனில் மைத்ராவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது மகன்களும் தொழிற்சங்க இயக்கத்தில் பணியாற்றி வருகிறார்கள். தோழர் நீலிமா மைத்ராவின் மறைவு இடதுசாரி இயக்கத்தி ற்கும், இந்திய தொழிற்சங்க இயக்கத்திற்கும், உழைக்கும் பெண்கள் இயக்கத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று சிஐடியு அகில இந்திய செயற்குழு புகழஞ்சலி செலுத்தியுள்ளது.